Friday, June 23, 2006

அகலிகை

அகலிகை. இது தழிழாக்கப்பட்ட பெயர். சரியான பெயர் = ‘அஹல்யா’ . அதாவது, ‘அழகின்மையே இல்லாதவள்’ என்று பொருள். அதாவது, அழகே வடிவானவள்.

இவள் கதை வினோதமானது. ஆச்சரியகரமானது. பலப்பல பரிமாணங்களை தாங்கியது. ஆனால், பெண்ணியவாதிகளின் பலத்த சர்ச்சைக்கு இலக்கானது.

கற்பு என்னும் கனலுக்கு சனாதன தர்மத்தில் சரியான இலக்கணம் என்ன என்பதை இவள் கதை நமக்கு உணர்த்துகிறது.

அகலிகை படைப்பும் அவள் வாழ்வும் வினோதம்! அதனால், அவள் பெற்ற தாழ்வும், இறுதியில் மீள்வும் அந்த மீள்வு கொடுத்த புகழும் மேலும் வினோதம்.

அகலிகை உடம்பாலும், மனதாலும் கெட்டவள். ஆனால், அதற்காக அவள் புகழ் அழிக்கப்படவில்லை. மாறாக, கற்பரசிகளில் முதன்மை தகுதி பெற்றவள். புராணங்களில் பேசப்படும் ஐந்து பதிவிரதைகளில் முதலில் வணங்கப்படுபவள். பிராட்டி சீதையைக்கூட இவ்விழயத்தில் முந்தியவள். இதுதான் ஆச்சரியகரம்.


இதுவே பெண்மைக்கும் கற்புக்கும் சனாதன புராணம் காட்டும் நியதி. கற்பு சாஸ்திரத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.

இவள் கதை ராமாயணத்தில் மிகச்சிறிதாக பேசப்படுகிறது. வால்மீகி ராமாயணத்தில் ஒரு நாற்பது ஸ்லோகங்களில் இவளின் நிகழ்ச்சி அடங்குகிறது. ஆனாலும், அகலிகை மிகப் பெரிய சக்தியாக பேசப்படுகிறாள். அகலிகை கதை பாடாமல் ராமாயண காதை பேசப்படுவதில்லை.

அகலிகையின் கதையில் நுட்பங்கள் பலருக்கு தெரிவதில்லை. அகலிகை தவறு இழைக்காதவள் என்கிறார்கள். அகலிகை ராமர் கால்பட்டு சாபம் நீங்கினாள் என்கிறார்கள்.

இவள் கதையை முழுமையாக எழுதவும், கற்பு நெறிக்கு சரியான இலக்கணத்தை சுட்டிக்காட்டவும் இந்த பதிவு இட ஆசைப்பட்டேன்.

விச்வாமித்திரர் ஐயனை காட்டுக்கு அழைத்துப்போனது, பிராட்டியை மணமுடிக்க என்று புராணக்காரர்கள் பேசுகிறார்கள். ஆனால், அருணகிரியார் அவ்வாறு சொல்லவில்லை. ஐயன் காடேந்தது அகலிகைக்கு அருள் வழங்க என்கிறார்.

“கல்லிலே பொற்றாள் படவேயது
நல்ல ரூபத்தே வரக்கானிடை
கௌவை தீரப்போகும் இராகவன்”
(கொள்ளையாசை – திருப்புகழ்)

ஆயிரம் வருடங்களாக ஐயன் ராமன் கால் தூசிக்கு ஏங்கியிருக்கும் இந்த பக்தையை மீட்க காட்டிற்கு வந்தான் ஐயன் என்கிறார் அருணகிரி.

முதலில் இவள் புராண கதை.



உலகில் படைத்த பெண்களின் அழகை எல்லாம் சேர்த்து இவளை படைத்தான் படைப்புத்தேவன் பிரம்மா. அத்துணை அழகு.

படைத்தவன் அவளை கௌதமரிடம் மணமுடித்தான். கௌதமர் சப்தரிஷிகளில் ஒருவர். தவத்தில் மிகப் பெருமை வாய்ந்தவர். அவர் உயரிய பண்புகளை உடையவர். பிரம்மா, இந்த அழகைத்திரட்டிய பெண்ணை காக்க புலன்களை அடக்கிய முனிவரே சிறந்தவர் என்று கருதினான் போலும்.

காமம் யாரை விட்டது? அது நம் படைப்பின் காரணம் இல்லையா! நம் உடற்கூறின் உந்துதலில் நியதிகள் சிலசமயம் கண்ணுக்கு தெரிவதில்லை போலும். மாற்றான் மனைவிக்கு ஏங்கினான் தேவன் இந்திரன்.

இடையே ஒரு விளக்கம். தேவர்கள் நம்மைப்போல கர்மங்களுக்கும், வாசனைகளுக்கும் (ஆசை, வெறுப்பு) உட்பட்டவர்கள். இவர்கள் தெய்வம் இல்லை. (பார்க்க என் முந்தைய ஒரு பதிவு : ‘இந்து மத்த்தில் பல தைவம் உண்டா’.) சனாதன தர்மத்தில் ‘முப்பத்து முக்கோடி தெய்வங்கள்’ என்றெல்லாம் பேசுவதும், எழுதுவதும் அறியாமை மூடத்தனம். தெய்வத்துக்கும், தேவர்களுக்கும் வித்தியாசம் தெரியாததால்.

காமத்தால் அறிவு மங்குகிறது. ‘மையலால் அறிவு நீங்கி’ என்பது கம்பன் வரிகள். இந்திரன் சொல் கேட்டு சந்திரன் நள்ளிரவில் கோழிபோல கூவுகிறான். முனிவர் எழுந்து நதிக்கரைக்கு குளிக்க செல்லுகிறார்.

இந்து சாத்திரம் ஒரு அதீதமான விஞ்ஞானம். இங்கு கோட்பாடுகள் நம்பிக்கையால் மட்டும் நிகழ்வதில்லை. மண்ணால் ஆன உடலை மந்திர உடலாக்க நித்தமும் முயற்சி தேவை. மந்திரங்கள் மொழிகள் அல்ல. அவை தகுந்த குருவினால் ஏற்றப்படும் மின்சார கோள்கள். அவற்றை தக்க வைத்துக்கொள்ள வாழ்வாங்கு வாழவேண்டும். வெறும் மந்திர புத்தகத்தை படித்தால் இறையாண்மை வந்துவிடாது.

அருணோதய காலத்தில் (காலை சுமார் 4 ½ மணி அளவில்) குளிக்க வேண்டும் என்கிறது சாத்திரம். ஆதவன் எழும் முன்னே எழாதவன் பாபங்களை சுமக்கிறான். ராமாயணத்தில் பரதன் ஐயனை காட்டுக்கு அனுப்ப தான் காரணமாகியதற்கு வருந்துகிறான். அப்போது, ராமனை காட்டிற்கு அனுப்பியவர்கள் எத்துனை பாவங்களை சுமப்பார்கள் என்று சபிக்கிறான். அதில் ஒன்று, அதிகாலை தூங்குபவர்கள் பெறும் பாவம்.

இந்திரனோ முனிவர் உருவில் வந்தான். அவள் இந்திரன் என்று அகலிகை அறியாமல் இருந்தாள் என்று சிலர் பேசுவதும் தவறு. பெண்ணுக்கு மாற்றானை புரியாதா என்ன? ஒட்டு மீசை வைத்து உலகையே ஏமாற்றுவது இந்நாளைய சினிமாவில்தானே சாத்தியம்.

கணவன் கால் செருப்பை கழற்றும் சத்தம் கூட மனைவிக்கு தெரியும் என்பார்கள்.

தேவேந்திரனை கண்ட அகலிகை அவன் மீது மையல் கொண்டாள்.

அகலிகை அறியாமல் குற்றம் செய்தாள் என்று கவிகள் மழுப்பவில்லை. தன் அழகை அனுபவிக்க தேவேந்திரனே வந்தான் என்று ஆணவத்தில் சந்தோஷப்பட்டாள் என்கிறார் வால்மீகி. ('தேவராஜ குதூஹலாத்'). இவ்வாறு தெரிந்து தவறிழைத்ததால் அவள் தாழ்ந்து போனாள் என்கிறான் கம்பநாடான்.

தக்கது அன்று என்ன ஓராள்...
தாழ்ந்தனள் இருப்பத் தாழா
முக்கணான் அனைய ஆற்றல் ...
முனிவனும் முடுகி வந்தான்....

சென்ற முனிவர், காலம் தவறாக தென்பட்டதை உணர்ந்து திரும்புகிறார். அத்துணை தவ வலிமை பெற்ற முதலிடை முனிவர்களில் ஒருவருக்கு நடக்கும் பிழை தெரியாமல் இருக்குமா என்ன? ஆனால், முன்னமேயே தெரிந்து அவர் அதை தடுக்க மாட்டாததே ஒரு ஆச்சரியம். இறைவன் சித்தத்தில் முனிவரின் கவனம் முன்னமேயே இதில் விழவில்லை போலும்!

முனிவர் திரும்பியதும் இந்திரன் பூனை வடிவம் எடுத்து தப்பியோட பார்க்கிறான். முனிவரிடம் தப்ப முடியவில்லை.

உலகிற்கு நிரந்தரமான நெடிய பழி தேடி வைத்தவள் அகலிகை (இது கம்பன் வரிகள்). திரும்பிய முனிவரை பார்த்து பயந்து நிற்கிறாள். 'ஒரு விலைமகளைப் போல நடந்து கொண்ட நீயும் கருங்கல்லாய் கிட..' என்று அகலிகையை சபித்தார் முனிவர்.

"மெல்லியலாளை நோக்கி விலைமகள் அனைய நீயும்
கல்லியல் ஆதி என்றான் கருங்கல்லாய் மருங்கு வீழ்வாள்."

கருங்கல்லாய் ஆனாள் என்பது புராண செய்தி. அதை ஒட்டியே கம்பன் இங்கு பாடுகிறான். "கல்லியல் ஆதி" என்கிறான்.

ஆனால், ஆதி காவியமான வால்மீகி ராமாயணத்தில் அவ்வாறு இல்லை. 'அன்ன ஆகாரம் இல்லாமல், யார் கண்ணிலும் படாது இங்கேயே நெடுநாள் கிட' என்பதாகவே சபிக்கப்படுகிறாள். "வாயுபக்ஷா நிராஹாரா தப்யந்தீ பஸ்மசாயினீ" என்பதே வால்மீகி வாக்கியம்.

இது சாபமா என்று கேட்டால், முழுதாக சாபம் இல்லை என்பேன். தவம் செய்து கிட என்கிறார் முனிவர். தவம் செய்வது தண்டனையா? இல்லையே? தண்டனைகள் மிருகங்களை இன்னும் கொடிய மிருகமாக்க இல்லை! அவை மிருகத்தனம் களைந்து தேவ ஒளியை தோற்றுவிப்பதற்கே!

இதுவே முனிவர் அளித்த சாபம் என்கிற வரம்.....

இந்த சாபத்தில் இன்னொரு பாடமும் இருக்கிறது.

கம்பன் சொன்ன 'கல் போல் கிட' என்பது ஏன்? அந்நிய ஆடவன் தீண்டும்போது (மனதை, உடலை) கல் போல் கிடக்க வேண்டியவள் பெண். அப்படி இல்லாது இருந்ததால் 'கல்லியல் ஆதி' (கல் போல் கிட) என்று உணர்த்துகிறார் முனிவர். சாப வடிவில்.

அகலிகை சாபம் பெற்றாள். ஆனால், தேவேந்திரனுக்கு என்ன சாபம் கிடைத்தது? பெண்ணியவாதிகள் அகலிகையே கஷ்டப்பட்டாள், வழக்கம்போல ஆண்கள் தப்பிவிட்டார்கள் என்கிறார்களே, அது மிகவும் தவறு.

பாவத்திற்கு மூலமான இந்திரனுக்கு தண்டனை இல்லையா. நிச்சயம் இருந்தது. அது அகலிகையை விட கடுமையாக இருந்தது.

அகலிகைக்கு கிடைத்ததோ நிராகரிப்பு. இது மனதை வாட்டும். ஆனால், தேவேந்திரனுக்கு கிடைத்ததோ அவமானம். ஆயிரம் பங்கு கொடியது. இது உயிருடன் எரிக்கும்.

முனிவர் இந்திரனை மேலே சாபமிட்டார் இவ்வாறு...

‘தேவேந்திரா! இந்த பாவச்செயலுக்கு உனக்கு என்ன தண்டனை தெரியுமா? உன் வாழ்நாள் முழுக்க நீ அலியாவாய். அது மட்டும் உனக்கு போதாது. எந்த யோனியில் நீ லயித்து இங்கு வந்தாயோ, அந்த உறுப்பு உன் உடலெங்கும் ஆயிரக்கணக்கில் உருவாகட்டும்.’

இதுதான் அந்த தவசி சொன்ன சாபம்.

அப்பப்பா என்ன கொடுமை!! கல்லாகி காட்டில் கிடப்பதை விட ஆயிரம் பங்கு கொடியது. அவமானத்தில் ஒளிந்து ஒளிந்து வாழ்வது.

இந்த கொடிய சாபம் பெற்ற இந்திரன் இந்த சாபத்துக்கு தக்கவனே!!

(பிறகு மற்ற தேவர்கள் இந்திரனை அழைத்து அவனுக்கு பல தவத்தை செய்வித்து அவன் உடலில் தோன்றிய உறுப்புகளை ஆயிரம் கண்களாக மாற்றி அவன் ஒருவாறு அவமானத்துடன் வாழ வழி செய்கிறார்கள்... அது ஒரு கிளைக்கதை..

இந்த கிளைக்கதையின் தாத்பர்யம் என்ன?

அதாவது, அவமானம் இந்திரனுக்கு ஒரு குறியாக (symbol) ஆக மட்டுமே இருக்கட்டும். அவனை அவமானப்படுத்தும் நோக்கில், பெண்ணினத்தை அவமானப்படுத்த வேண்டாம் என்பது இங்கு குறிக்கிறது.... )

தனக்கேற்பட்ட சாப நிலை குறித்து அகலிகை விக்கித்து நிற்கிறாள்.

அந்த தவக்கனல் வருந்தி வாடும் அகலிகைக்கு மோட்சமும் வழங்குகிறார்.

சாப விமோசனம் எப்போ என்று கதறி அழும் அகலிகைக்கு முனிவர் வாயிலிருந்து "தசரதன் மகனாக பிறக்கும் இராமன் என்பவன் வரும் போது அவன் பாத தூளி உன்மேல் படும்போது இந்த கல் வடிவை விடு" என விமோசனத்திற்கு வழி கிடைக்கிறது.

("தண்டார்த் தசரத ராமன் என்பான் கழற்றுகள் கதுவ இந்தக் கல்லுருத் தவிர்தி என்றான்")

இது வாடலில் முனிவர் கொடுத்த ஒரு சிறு சுகம். மீளுகைக்கு வழி தெரிந்து காத்திருத்தலில் வலி குறைகிறது.

ராமன் கால் பட்டு எழுந்தாள் என்று பலரும் சொல்வதில் முழு உண்மையில்லை.

ராம்பிரான் கால் தூள் பட்டு (கால் பட்டு இல்லை!) அகலிகை மீண்டாள் என்றே வால்மீகியும், கம்பனும் விளக்கமாக சொல்கிறார்கள் ("கழல் துகள்" என்றே கம்பன் பாடலில் வருகிறது).

என்ன இருந்தாலும் அகலிகை மாற்றான் மனைவி. ஏக பத்தினி விரதனான ஐயன் ராமன் கால் அவள் மேல் பட்டது என்பது கூட சரியில்லை என்பதே கவிகளின் தெளிவு.

ஆச்ரமத்துக்கு ஏவிய ஐயன் கால் துகள் பட்டு அகலிகை கல்லிலிருந்து உரு பெற்று நிற்கிறாள். அகலிகை எழுந்ததும் 'அன்னையே' என்று அவளை அழைக்கிறான் ராமன்.

அவள் யார், ஏன் கல்லில் மறைந்திருந்தாள், இப்போது எப்படி தோன்றினாள் என்று விச்வாமித்திரர் விளக்குகிறார்.

அவள் வரலாற்றை (வழி தவறிய விவரத்தை) அறிந்ததும் ராமன் மீண்டும் அவளை 'அன்னையே' என்று அழைக்கிறான்.

அவன் அகலிகை மேல் இருந்த முதல் எண்ணத்தை சிறிதும் மாற்றவில்லை.

பொதுவாக பெண்களை அம்மா, தாயே என்று மரபாக அழைப்பதும், அவள் தாழ்ந்துவிட்டாள் என்று அறிந்ததும் மாறுவதும் வழக்கம்தானே?

ஆனால், இராமனோ "போது நீ அன்னை என்று பொன்னடி வணங்கிப்போனான்.." என்கிறார் கம்பன்.

அதாவது, மறுபடியும் அவளை அன்னையே என்று அழைத்து அவள் காலடியில் விழுந்து வணங்கி விடை பெறுகிறான் ராமன்.

என்ன ஆச்சரியம்! ஒரு முன்னாள் குற்றவாளியை இன்னாள் அருள்தலைவன் வணங்க வேண்டுமா? அதுவும் அன்னையே என்று அழைக்க வேண்டுமா?

அகலிகை ராமனுக்கு அன்னைதான்! மிகவும் மூலமான அன்னை!

இந்த விளக்கம் பேராசிரியர் திரு.ராதாகிருஷ்ணன் சொல்லி கேட்டிருக்கிறேன்...

இராமன் அன்னையே என்றழைக்க உரிமை உள்ளவர்கள் கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகிய மூவர். தன்னை பெற்றவள், தகப்பனின் மாற்று இல்லத்தரசிகள் என்ற முறையில்...

ஆனால், அகலிகை..

சாபம் பெற்ற நாள் முதல் ராமனை எதிர்பார்க்கிறாள் அகலிகை.

தசரதன் மகனாக அந்த இறைவனே இராமனாக வரவேண்டும் என்று அகலிகை முதலில் அறிவாள்.

இராமன் தசரதன் மைந்தனாகும் முன்னே முனிவரின் வாயால் பிறந்துவிட்டான். உண்மைதானே!

ஊன் உடம்பாக கோசலை திருவயிறில் தாங்கும் முன்னே, அகலிகையின் மனக்கருவில் உருவாகிவிட்டான் எம்பிரான். ராமனுக்காக, தசரதனுக்கு முன்னே, பல வருடம் மனதில் தவம் இருந்தாள் அகலிகை...

அப்படியானால், அகலிகை இராமனுக்கு அன்னைதானே??

அதனால், இராமன் கௌதம முனிவரை அணுகி "நெஞ்சினால் பிழைப்பிலாளை நீ நேர்க" என்கிறான். "நெஞ்சில் குற்றமற்ற இவளை நீங்கள் சேர்த்துக்கொள்ளுங்கள்" என்கிறாள்.

உடலால் ஏற்பட்ட குற்றங்களுக்கு பெண் என்றும் பொறுப்பல்ல. உடற்கூறுதான் காரணம். மனதால் ஏற்படும் தவறுக்கே மனிதன் பொறுப்பாகிறான்.

தீய எண்ணத்தால் ஏற்படும் தவறுக்கே மனிதன் பொறுப்பாகிறான். தீய எண்ணத்தில் தோன்றிய தவறை நல்ல எண்ணத்தால் மட்டுமே அழித்து எழுத முடியும். ராம, ராம என்ற தாரக மந்திரத்தால் ஆண்டுகள் பல ஐயனுக்காக ஏங்கி காத்திருந்த அந்த மனதில் எல்லா குற்றங்களும் பொசுங்கிவிட்டன. ராமனை வணங்கிய நெஞ்சு குற்றமற்றது.

அதனால், அவள் "நெஞ்சினால் பிழைப்பிலாள்" என்று ஆகிறாள்.



ராமாயணம் காட்டும் நீதி இதுவே! கற்பு என்பது போட்டால் உடைந்துவிடும் மண்சட்டி அல்ல.

இந்த கதையில் நாம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம். அகலிகை வந்தவன் மாற்றான் இந்திரன் என்று அறிந்தும் அவன் பேற் கொண்ட ப்ரேமையால் மயங்கி தவறிழைத்தாள். அதை நினைத்து மனமாற வருந்தி மன்னிப்பு கேட்கிறாள். அவள் மனமார திருந்தியதால், முனிவர் கௌதமரும் நல்வழி காட்டுகிறார்.

ஒவ்வொரு வினையும் எதிர்வினை கொண்டதாகிறது. ஒரு காரணமும் ஒரு காரியத்தில் விளைகிறது. ஒவ்வொரு தவறும் தண்டனைக்கு உரியதாகிறது.

ஒவ்வொரு வருந்துதலும் மீட்புக்கு கதவு திறக்கிறது. ஒவ்வொரு தவத்திற்கும் பலன் கிடைக்கிறது.

இதுதான் இங்கு காணும் கோட்பாடு.

தன் கதையால், அகலிகை நமக்கு வேதாந்தத்தையும் போதிக்கிறாள். முனிவர் கௌதமர் ஒரு ஜிதேந்திரியர் (புலன்களை வென்றவர்). அவர் அகலிகை என்கிற பக்தியுடன் வாழ்கிறார்.

அந்த பக்தி இந்திரன் என்கிற மனதால் களங்கப்படும் போது, மனதுக்கு அடிமையாகி அந்த ஜிதேந்திரயருடமிருந்து நழுவுகிறது.

பின், அந்த பக்தி புலன்களில் வெறுப்புற்று வருந்தி, கல் போல தவத்தில் கிடக்கிறது. (அதாவது, புற உலகிடமிருந்து ஒடுங்கி... அதாவது புலன்களிடமிருந்து விடுபட்டு....)

அந்த தவத்தின் விளைவாக, அகண்டமான இந்த பிரம்மத்தின் கருணையால், களங்கம் கலைந்து தன் சுய பிரதாபம் ஏற்று தன் ஜிதேந்திரிய தலைவனும் இணைகிறது.

இக்கதை பாவர்களுக்கு என்றும் ஊக்கமளிக்கிறது.

தவத்தால் பாவங்களை கழுவி தன் பழைய பிரகாசத்தை எந்த ஜீவனும் அடைய முடியும் என்பது இந்த கதையின் திரிபு.

ஜீவன் ஆசாபாசங்களால் எப்போதும் கட்டுண்டவன். அதனால் தன் சீலத்தை இழந்தவன். அதை தவத்தாலும் தியாகத்தாலும் அவன் பெற வேண்டும்; பெற முடியும்.

இதைப்பெற ஆக்கமான ஒரு வளர் பாதையே மந்திரங்கள். தன் வழியில் சத்தியத்திலிருந்து விலகாமல் இருக்க அவன் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

அவ்வாறு மடத்தனத்தால் விலகினாலும், உண்மை வருத்தத்தில் விளைந்த கண்ணீர், மேலும் தவறிழைக்காமல் இருக்க உறுதி, உழைப்பில் விளைந்த தவம் என்பவற்றால் எந்த பாவமும் இல்லாது எறிந்து போகும்.

ராமாயணத்தில் மந்திர சாத்திரத்தை ஏற்றி இயற்றப்பட்ட அற்புதமான வடமொழி காவியம் 'அத்யாத்ம ராமாயணம்'. அதில் அகலிகை இராமன் குறித்து வணங்கிய ஸ்தோத்திரம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. அகலிகை தன்னை மீட்ட அந்த சிறுவன் கோலத்தில் உள்ள ஐயனை துதிக்கிறாள்.

அந்த துதி பரம பாவனாமனது. பரம வீரியமானது. அந்த துதியில் மனமுருகி பாடுவோருக்கு ராமன் உருவம் கண்ணிலேயே காண்பது போன்று அமைந்திருக்கிறது. மிகவும் தரத்தில் வீழ்ந்து நாம் செய்யும் எல்லா பாவங்களையும் பொசுக்கும் அந்த மகா துதியை நாமும் துதித்து ஈடேறுவோமாக.

22 comments:

Geetha Sambasivam said...

அந்த ஸ்தோத்திரத்தையும் போட்டிருக்கலாமே? என் கிட்டே இருக்கா தெரியலை. ஆரம்பம் என்ன? ஒரு லின்க் கொடுக்க முடியுமா?

Muse (# 01429798200730556938) said...

ஜயராமன் ஸார்,

அருமையாக இருக்கிறது.

ராமச்சந்த்ர ப்ரபுவின் ஆஸி உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது போலும். இது போல மேலும் பல எழுத வேண்டுகோள் விடுக்கிறேன்.

ராம் ராம்.

ஜயராமன் said...

கீதா மற்றும் ம்யூஸ் அவர்களின் பின்னூட்டங்களுக்கும், உற்காச வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி.

அஹல்யா ஸ்தோத்ரம் மிகவும் ப்ரஸித்தமானது. இணையத்தில் பல இடங்களில் எழுத்து வடிவமும், ஒலி வடிவமும் உள்ளது. தாங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இதோ ஒரு லிங்க்...

http://www.prapatti.com/slokas/slokasbyname.html

இதில் Sriiraama Stotram (by Ahalya) என்று இருக்கிறது.

சரி பார்த்துக்கொள்ளவும்

நன்றி

Chandravathanaa said...

நல்ல பதிவு
அருமையாக இருக்கிறது.

உங்கள் நண்பன்(சரா) said...

முதலில் கட்டுரையை பார்த்ததும் பெரியதாக இருக்கின்றதே என்று மலைத்தேன்,
ஆனால் படிக்க படிக்க மிகவும் ஆர்வமானேன்,

அதிலும் குறிப்பாக அகலிகையின் பழைய வரலாறு ராமபிரானுக்குத் தெரிந்தும் அவரை
"அன்னை" என்று பெருந்தன்மையாக அழைக்கும் இடம் அருமை...
மேன்மக்கள் மேன் மக்கள் தான்..
நல்ல ஒரு சரித்திரப் பதிவு
வாழ்த்துக்கள்...

அன்புடன்...
சரவணன்.

Unknown said...

அருமை.அகல்யை பற்றி நான் முன்பு ஒரு பதிவு போட்டிருந்தேன்.படித்து பாருங்கள்.பின்னூட்டங்களைல் அருமையான விவாதம் ஒன்று நடந்தது.அதையும் பாருங்கள்.

http://holyox.blogspot.com/2006/04/76.html

நாமக்கல் சிபி said...

அருமையாக எழுதியுள்ளீர்கள்.

தயவு செய்து இனிமேல் இதைப் போல் நிறைய எழுதுங்கள்.

ராம நாமத்தை ஒரு முறை உச்சறித்தாலே நம் பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். அப்படியிருக்கும் போது ஆயிரம் வருடம் ஐயனையே நினைத்துக் கொண்டிருந்தால், அதன் பலனை சொல்லவும் வேண்டுமா???

//இராமன் தசரதன் மைந்தனாகும் முன்னே முனிவரின் வாயால் பிறந்துவிட்டான். //
முனிவரின் வாயால் பிறந்துவிட்டான் என்பதை விட அன்னையின் மனதிலே பிறந்துவிட்டான் என்று சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஒரு சின்ன விண்ணப்பம், இனிமேல் தேவையில்லாத விவாதங்கள்ல ஈடுபடவதை விட்டு இந்த மாதிரி பயனுள்ளதை நிறைய எழுதுங்கள்.

ஜயராமன் said...
This comment has been removed by a blog administrator.
ஜயராமன் said...

ஐயா சதயம் அவர்களே,

////இராமாயணம் இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்த இராமனின் சொந்த தந்தை தசரதன் அல்ல. உண்மையான தந்தையின் பெயர் சிரங்கன். தசரதன் அல்லாத சிரங்கனுக்கு பிறந்த இராமனை, இராவணன் தங்கை சூர்ப்பநகை தன்னை திருமணம் செய்யும்படி கேட்டதால், அவளின் மூக்கு, முலை, மூடி போன்றவற்றை வெட்ட உத்தரவிட்ட இராமன் பெண்களை கொச்சைப்படுத்துகின்றான்.
......

......

.......

////



தங்கள் கருத்துக்கள் மிகவும் தரமற்று சொல்லப்பட்டிருக்கின்றன.

ராமனின் தந்தை மற்றும் பல வேறு நிகழ்ச்சிகளை தாங்கள் மாற்றி சொல்வதற்கு என்ன ஆதாரம் என்று தெரியவில்லை. ஆதாரத்துடன் சொன்னால் படிக்க முயற்சிக்கிறேன்.

ராமன் சீதையை தீக்குளிக்கச் செய்த்தற்கான காரணத்தை ராமனே தீக்குளிப்பு நிகழ்ச்சிக்கு பிறகு சொல்கிறான். அதை சிறிது படித்து பார்க்கவும்.

தங்களின் பின்னூட்டம் எனக்கு அருவருப்பை தருகிறது. என் கருத்துகளுக்கு முரண்படுவதால் அல்ல. பொறுக்கி போன்ற சில வார்த்தைகளை நாராசாமாக தாங்கள் உபயோகித்திருப்பதால்.

இந்த பின்னூட்டத்தை நான் பதிய விரும்பவில்லை. தயை செய்து தாங்கள் சொந்த பதிவில் தங்கள் கருத்துக்களை முன்வைக்க வேண்டுகிறேன்.

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

Unknown said...

////ராமன் சீதையை தீக்குளிக்கச் செய்த்தற்கான காரணத்தை ராமனே தீக்குளிப்பு நிகழ்ச்சிக்கு பிறகு சொல்கிறான். அதை சிறிது படித்து பார்க்கவும்.//

ஜயராமன்,

சீதை தீகுளிப்பு பற்றி "கனலை எரித்த கற்பின் கனலி" என்ற தொடரை நான் தமிழோவியத்தில் எழுதினேன்.ஐந்து வார தொடர்.நேரம் கிடைக்கும்போது படித்து கருத்து கூறினால் மகிழ்வேன்.

http://www.tamiloviam.com/unicode/printallt.asp?week=selvan1

Muse (# 01429798200730556938) said...

>>> இராவணன் தங்கை சூர்ப்பநகை தன்னை திருமணம் செய்யும்படி கேட்டதால், <<<

அவள் உண்மையில் திருமணம் செய்ய கேட்கவில்லை. அந்த வார்த்தையை பயன்படுத்தியிருந்தாலும் (பயன்படுத்தினாளா?) அது சும்மா அப்படி இப்படி இருப்பதற்கான அழைப்புத்தான். அது ராம லக்ஷ்மணர்களுக்கு அருவருப்பாக இருந்திருக்கிறது.

அந்த பதிலை போட்டவருக்கு அது அருவருப்பான விஷயமாகத் தெரியவில்லை. ராம லக்ஷ்மணர்களின் செயல் அருவருப்பாகத் தெரிகிறது. மலர் தேடும் வண்டுகள் உண்டு. சில வண்டுகள் வண்டுருட்ட தேடுவது வேறு.

லோகோ பின்ன ருஸி.

Muse (# 01429798200730556938) said...

ஜயராமன் ஸார்,

தங்களுடைய கருத்தை படிக்கும்போது வேறொன்றும் தோன்றுகிறது.

கற்பு என்பது உடல், மன ஸம்பந்தமானது இல்லை. அது ஆன்ம வேட்கை. அதற்குத் தேவையானது நிலையான சித்தம். சித்தம் தவறி இந்திரனை சேர்ந்த அன்னைக்கு கௌதமரின் அறிவுரை (அது சாபம் என்று நான் கூறமாட்டேன்) தெய்வத்தை நினைந்து தபஸ் செய்வது. கலைந்த சித்தத்தை ஒருமுகப்படுத்தி தெய்வ ஸான்யத்தையும் அவளிருந்த இடத்திற்கு வரவழைத்தாள். கௌதமருக்கும் கிடைக்காதது அவரின் அறிவுரையை பின்பற்றிய அன்னைக்குக் கிடைத்தது.

அதையேதான் ஸீதா ப்ராட்டியும் செய்தாள். ராமனை தன்னிடம் வரச்செய்தாள். ஆயினும், கற்புக்கரஸிகளின் லிஸ்ட்டில் தன் உடலையும், மனத்தையும் வேறொருவனிடம் இழந்த அஹல்யைக்கே முதலிடம். எனவே கற்பு என்பது உடல், மன ஸம்பந்தமானது இல்லை. அது தபஸ். ஒருமுகப்படுத்தப்பட்ட சித்தம்.

அந்த ஒருமுகப்படுத்தப்பட்ட சித்தம் இல்லாத ராவணனும் வீழ்ந்தான். அவன் தங்கையும் அவப்பெயர் பெறுகிறாள். இவ்விருவரின் செயல்களையும் நியாயப்படுத்துபவர்களுக்கும் இதுவே கதி.

Muse (# 01429798200730556938) said...

ஜயராமன் ஸார்,

க்ரஹஸ்த தர்மத்திற்கு முன்னோடியாய் இருப்பவள் பற்றி, ஸன்யாஸ தர்மத்திற்கு முன்னோடியாய் இருப்பவள் சொன்னது பின்வருமாறு (ஆங்கிலத்தில்):

One day Nivedita asked her students who the Queen of India was. The girls naturally replied: the Queen Victoria (as the British then ruled India). This made Nivedita's face red with anger and pain. She spoke in an indignant tone, `What! You do not even know who the queen of India is? Sita is the queen of India—the eternal queen of India.' She repeated the name `Sita' with an emphasis.

Another day Nivedita asked who the most heroic of all women characters in Mahabharata was. The girls gave different answers—Draupadi, Subhadra, Kunti, etc. Nivedita was not satisfied. She told them that Gandhari, the consort of Dhritarashtra, was the most heroic woman of all. Her husband was blind so as a devoted wife she denied herself the light of the world. But she never tolerated his unjust acts. She was extremely fond of her son, Duryodhana. But when he came to seek her blessings before the Kurukshetra war she only said, `Let victory be on the side of the righteous.'

Netaji Subhas Chandra Bose said of Nivedita: 'I learnt to love India by reading Vivekananda and I came to understand Vivekananda through Nivedita's writings.'

Muse (# 01429798200730556938) said...

ஜயராமன் ஸார்,

இன்னொரு ஸந்தேகம். கௌதமர் அன்னையை தவம் செய்ய பணித்தபோது அதை கோபத்துடன் சொன்னாரா, அதாவது அவரிட்டது சாபம் என்கிற வகையிலிருந்ததா? என்னப்பன் கம்பனும், வால்மீகி ரிஷியும் என்ன மாதிரி இதை விவரிக்கிறார்கள்?

குமரன் (Kumaran) said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் ஜயராமன் ஐயா. மிக மிக விரிவாக இந்தக் கதையை எழுதியிருக்கிறீர்கள்.

ஜயராமன் said...

சந்திரவதனா அவர்களே,

தங்கள் உற்சாகத்திற்கு நன்றி. தங்கள் என் பதிவை பார்வையிட்டதும், அதில் உற்சாகப்படுத்தியதும் எனக்கு பெரிய பெருமையாக கருதுகிறேன்.


உங்கள் நண்பன் அவர்களே,

தங்கள் உற்சாகத்திற்கு நன்றி. இராமனின் குணசித்திரத்தை அறிந்தால் அதில் வியப்பு ஏற்படுவது உண்மை.

=========

செல்வன் அவர்களே,

தங்கள் பதிவை படித்தேன். வியந்தேன். தங்கள் பதிவில் என் எண்ணங்களை பின்னூட்டம் இட்டுள்ளேன். தங்கள் பதிவு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. ஒரு நல்ல பதிவை படித்த சந்தோஷம் ஏற்பட்டது...

=================

வெட்டிப்பயல் அவர்களே,

தங்கள் உற்சாகப்படுத்தும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

தங்கள் அனுசரணையான அறிவுரையில் மிக்க நியாயம் இருக்கிறது. எது தேவையான பதிவு, எது தேவையில்லை என்று முடிவு செய்வது எனக்கு கடினமாகவே இருக்கிறது. ஏதோ எழுதவேண்டுமே என்று என் எந்த ஒரு பதிவும் போட்டதில்லை. சொல்வதற்கு நான் முக்கியமான விவரம் என்று நினைத்தால் மட்டுமே அவற்றை எழுத்தில் பதிகிறேன்.

என் ஆத்மார்த்தத்தக்கு வைதீகஸ்ரீ யிலும் என் நடைமுறை பதிவுகளுக்கு "விருது" பதிவிலும் எழுதுகிறேன். நான் கேட்கும், காணும், உணரும் அநீதிகளை எங்கிருந்தாலும் எதை சுட்டிக்காட்டாவிட்டால் நான் ஒரு தவறிழைத்தவன் ஆவேன் என்று உணர்கிறேன். என் பெயர், புகைப்படம் போட்டு என் சரியான நீதி நிலைமையை நிறுத்த நான் என் தகுதிக்கு ஏற்றவாறு போராடிக்கொண்டே இருப்பேன்...

தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி

+++++

ம்யூஸ் சார்,

சதயம் அவர்களின் பின்னூட்டம் மிகவும் காட்டமாக இருந்தது. அதில் காழ்ப்பு தூக்கலாக காணப்பட்டது. அது அவரால் எழுதப்பட்டது அல்ல என்று அவர் விளக்கியதும் கொஞ்சம் சமாதானம் அடைந்தேன்.

என் இறைவனைப்பற்றி என்னால் நடுநிலைமையாக இருக்க முடியவில்லை. சொல்ல போனால், மனித சமுதாயத்துக்கு பல வழித்தோன்றல்கள் தேவை. தற்கால நாகரீகத்தில் எல்லா வழித்தோன்றல்களையும் விமர்சித்து அவர்களை நிர்வாணமாக்கி கூறு பிளந்து நாம் ரசிக்கிறோம். இதில் சதயம் போன்றவர்கள் மிகவும் தேர்ச்சி உள்ளவர்கள் போல இருக்கிறது. இதனால், சமுதாயத்தில் வழி செப்பனிடப்படாமல் தான்தோன்றித்தனம் வளர்ந்து, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ஆகிறது. இதுவே நாகரீக சமுதாயத்தின் அவலம். ராமனும், காந்தியும், யேசுவும், சீதையும், நமக்கு மிகவும் தேவைப்படும் பிம்பங்கள். அவர்கள் நம் சமுதாயத்தின் ஆணிவேர்கள். அவற்றை களைபவர்கள் இந்த சமுதாய செடியின் வேரில் வென்னீர் ஊற்றுகிறார்கள்....

===========

2. ராமன் விசுவாமித்திர்ருடன் காட்டுக்கு ஏகும் போது மூன்று பெண்களை சந்திக்கிறான். ஒருத்தியை அழித்து அவளுக்கு அழியா புகழை தருகிறான். இன்னொருத்தியை பழி நீக்கி அவளுக்கு இழந்த வாழ்வை தருகிறான். இன்னொருத்தியை கைப்பிடித்து தன்னையே தருகிறான்.

இதுவே ராமாயணம் காட்டும் நீதி. நற்பண்புகள் இல்லாமல் சமுதாயத்துக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் தீய சக்திகள் இறையால் அழிக்கப்படும். தவறிழைத்தும் வருந்தி ஏங்கும் சக்திகள் இறையால் முழுதுமாக பழி நீங்கி மன்னிக்கப்பட்டு அவர்கள் வேண்டும் வாழ்க்கை வழங்கப்படும். தன்னையே இறைக்கு அர்ப்பணித்து நீயே என் உலகம் என்றிருக்கும் சக்திகளை அந்த இறைவன் முழுதுமாக ஆட்கொள்ளும்..

+++++++++++

செல்வன் சார்,

தங்கள் பதிவுக்கு கொடுத்த லிங்குக்கு நன்றி. அவசியம் நான் வார இறுதியில் படித்து என் அறிவை வளர்த்துக்கொள்கிறேன். அந்த பதிவு பற்றிய என் எண்ணங்களையும் தங்களிடம் பகிர்ந்து கொள்ளுவேன். மிக்க நன்றி

+++++++++++++++

ம்யூஸ் சார்,

தங்களின் ஆழ்ந்த கருத்து செறிந்த எழுத்துக்கள் வியக்கவைக்கின்றன.

தங்கள் எழுத்துக்களில் காணும் முதிற்சியை தங்கள் புகைப்படத்தில் காணவில்லை. தங்கள் புகைப்படத்தில் மிக்க இளைமையாக இருப்பது தங்கள் இளம் பருவம் அல்லது மகன் மாதிரி வேறு யாரோவா?? :-)

3. நிவேதிதா அம்மையாரின் அற்புதமான வரிகளை பதிந்ததற்கு மிக்க நன்றி.

வடநாட்டில் காந்தாரி மிகவும் போற்றப்படுவது மாதிரி தமிழகத்தில் அவ்வளவு தீவிரமாக ஆதரவு இல்லாத்து வியப்பே! ஒருவேளை த்ரௌபதி கோயில் வழிபாட்டின் பிரதிபலிப்போ இது என்று தெரியவில்லை. சாத்திரங்கள் காந்தாரியை மிக சிறந்த பதிவிரதையாக காட்டுகின்றன். வடநாட்டிலும் அவள் சிறந்த பெண்மனியாகத்தான் வணங்கப்பெறுகிறாள். ஆனால், தமிழகத்தில் காந்தாரி என்ற சொல் ஒரு பொறாமை கொண்ட சுயநல பெண்ணின் பிம்பமாகவே பேசப்படுகிறது என்று நினைக்கிறேன். காந்தாரி பொறாமையால் உலக்கையை எடுத்து இடித்துக்கொண்டாள் என்றெல்லாம் கிராம்ப்புற கதைகள் பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். இது குறித்து மேலும் யாராவது சமுதாய விற்பண்ணர்கள் எழுதினால் படித்து பலன் அடைவேன்..

3. கௌதமர் முதலில் இந்திரனை சபித்து பிறகு அகலிகையை சபிக்கிறார். "சபிக்கிறார்" என்றே இருவருக்கும் வால்மீகி எழுதியிருக்கிறார். வால்மீகி நடந்தது நடந்ததாக கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் எழுதுவார்....

எல்லா சாபமும் சாபம் இல்லை. பல வரங்களே என்று தாங்கள் கூறுவது முற்றிலும் சரி. ச்ரவண்குமாரை அறியாமல் கொன்று அவன் பெற்றோர்களால் சாபம் பெறும்போது தசரதன் வருந்தாமல் சந்தோஷப்பட்டான் என்கிறார்கள். "மகன் பிரிவு தாங்காமல் நீயும் மரணம் அடைவாய்" என்று ஒரு பிள்ளை இல்லாதவனை பார்த்து சொன்னால் அது வரம்தானே!!

தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி

Muse (# 01429798200730556938) said...

ஜயராமன் ஸார்,

>>>> தங்கள் எழுத்துக்களில் காணும் முதிற்சியை தங்கள் புகைப்படத்தில் காணவில்லை. தங்கள் புகைப்படத்தில் மிக்க இளைமையாக இருப்பது தங்கள் இளம் பருவம் அல்லது மகன் மாதிரி வேறு யாரோவா?? :-)<<<<

அதற்குத்தான் கொஞ்சம் சின்ன பையனாய் தெரிகிற ஃபோட்டாவை போட்டுள்ளேன் :-D !!

எனக்கு வயது கடந்த பன்னிரெண்டு வருடங்களாக இருபதுதான்.

பிறந்தது (சமீபத்தில் என்று எழுதுபவருக்குப் போட்டியாக) முன்னொரு காலத்திலே 1974ல். (ஃபிப்ரவரி 19).

ஆனாலும், நேரே பார்த்தால் டோண்டு ஸார், ஜோஸஃப் ஸார், சிவஞானம் ஸாரெல்லாம் எனக்கு உருவத்தில் தம்பிகள் மாதிரித்தான் தெரிவார்கள்
(என் வழுக்கைத் தலை, பெரிய தொப்பை).

>>>>அல்லது மகன் மாதிரி வேறு யாரோவா??<<<

அது சரி. குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விடாதீர்கள். நான் இன்னமும் ப்ரம்மச்சாரிதான்.

பாராட்டு ஸந்தோஷமளிக்கின்றது. அதற்குத் தகுந்தவனாக முயல்கிறேன்.

Anbu Selvaraj Subramanian said...

கொளதம முனிவர்

மதிப்புக்குரிய திரு. ஜயராமன் அவர்களே,
கோதாவரி நதி க‌டல்கலக்கும் இடங்களில், கொளதம முனிவரின் சிலை எங்கு உள்ளது என்று அறிவீர்களா?
அறிந்தாள் எனக்கு anbuselvaraj@hotmail க்கு தெரிவிப்பீர்களா?

மிக்க நன்றி.

கானகம் said...

அருமையாக கட்டுரை ஜெயராமன் அவர்களிடமிருந்து. தங்களது கட்டுரைகளை எப்போதும் படித்து வருகிறேன். அகலியை படிக்க மிக நன்றாக இருந்தது. எப்போதும் நமது மனதிற்கு பிடித்த விஷயங்களைப் படிக்கும்போது சற்று கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுவது இயற்கை. அதையே இதிலும் அனுபவித்தேன்.

நன்றி. ஜெயக்குமார்

அதிரை தங்க செல்வராஜன் said...

Dear Sir,

Very nice article.

Adirai Thanga Selvarajan

Anonymous said...

ஐயா,
உங்கள் பதிவுக்கு நன்றி. வாசித்துப் பயனடந்தேன். உங்களிடம் ராமாயணத்தைப் பற்றி ஒரு கேள்வி கேட்க ஆவலாயுள்ளேன். இப்பொழுதும் இந்தப் பதிவு active ஆக இருக்கிறதா என்று அறியத்தாருங்கள்.
நன்றி.
அற்பு.

அகல் said...

அருமையாக விளக்கியுள்ளீர்கள் ஐயா.. விளக்கத்திற்கு மிக்க நன்றி...

ஆனால் நீங்கள் சொல்வது போல் உடற்கூறு மட்டுமே இந்த தவறுக்கு காரணம் அல்லவே... உள்ளத்தால் அவள் மனமுவந்துதானே இந்த தவறைச் செய்கிறாள்..

//உடலால் ஏற்பட்ட குற்றங்களுக்கு பெண் என்றும் பொறுப்பல்ல. உடற்கூறுதான் காரணம். மனதால் ஏற்படும் தவறுக்கே மனிதன் பொறுப்பாகிறான்.//