Friday, October 12, 2007

ராம ஆஞ்சனேய ஆலிங்கனம்

லங்கையிலிருந்து வெற்றிகரமாக பிராட்டியை தரிசித்து பெருமாளுடைய சந்தேஷத்தை கொடுத்து திரும்பிய ஆஞ்சனேய ஸ்வாமியை பெருமாள் சந்தோஷம் தாங்காமல் ஆலிங்கனம் பண்ணிக்கொண்டார்.

மகான் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதரின் பேரனான பிரசித்தமான பக்த கவி நீலகண்ட தீக்ஷிதர் அவர்கள் ரகுவீரஸ்தவம் என்ற ஸ்தோத்திரத்தில் இதை அத்வைத பரமாக இப்படி அன்வயப்படுத்துகிறார்.

नित्यम् सुशुप्तिषु परिश्वजसे न राम
भूतानि किम् निखिलभूतगुहाषयस्त्वम्।
आसाद्य तत् प्रकटम् अर्थम् अवाप कीर्तिम्
आचन्द्रतारविमलाम् अनिलात्मजन्मा॥ रघुवीरस्तवः

நித்யம் சுசுப்திஷூ பரிச்வஜஸே ந ராம
பூதானி கிம் நிகிலபூதகுஹாஷயஸ்த்வம்
ஆஸாத்ய தத் ப்ரகடமர்த்தமவாப கீர்த்திம்
ஆசந்த்ர தாரவிமலாம் அநிலாத்மஜன்மா

ராம - ஹே ராமா,

நிகிலபூதகுஹாஷயஸ்த்வம் - உலக பூதர்களின் ஹ்ருதய குகையில் வசிக்கும் (சாக்ஷாத் ப்ரம்மனான நீ..)

நித்யம் சுசுப்திஷூ - தினசரி சுசுப்தியில் (ஆழ்ந்த உறக்கத்தில்)

பூதானி - எல்லா உயிர்களையும்

பரிச்வஜஸே ந ராம - அணைப்பதில்லையா ராமா?

தத் அர்த்தம் - அந்த செல்வம் (ஆசிர்வாதம்)

ப்ராக்தம் - திறந்தபடி (அதாவது முழித்திருக்கும்போது)

ஆஸாத்ய - கிடைக்கும்

அநிலாத்மஜன்மா - வாயுபுத்ரனான ஹனுமான்

ஆசந்த்ர தாரவிமலாம் - சந்திர நட்சத்திரங்களுள்ளவரை (அதாவது சிரஞ்சீவியாய்) அப்பழுக்கற்று...

கீர்த்திம் - புகழை

அவாப - அடைந்தார்.

ஒவ்வொரு ஜீவனும் ஆழ்ந்த உறக்கத்தில் பரப்பிரும்மத்துடன் ஐக்கியமாவதாக உபநிஷதங்கள் சொல்கின்றன. ஆனால், அவர்கள் இதை அறியாமல், விழித்தெழும்போது மீண்டும் வாசனை, கர்மா கட்டுண்ட ஜீவர்களாகவே எழுகிறார்கள்.

அப்படி ஒருவன் விழித்திருக்கும்போதே, பிரும்மத்துடன் கலந்தால் - அதாவது தன் பிரும்ம உருவை உணர்ந்தால் - அதுவே மோட்சமாகும்.

பரப்பிரும்மமான ராமன் அனுமனை ஆலிங்கணம் செய்து இந்த உயர்ந்த பதவியை கொடுத்தான். இதுவே ராமாஞ்சநேய ஆலிங்கனத்தின் ரகசியம்.