Monday, April 24, 2006

ராவணனும் தசரதனும் - 2

ம்யூஸ் அவர்களுடன் விவாதம் மேலும் தொடர்கிறது.

முதல் பாகத்தை இங்கே பார்த்தோம்:

http://vaithikasri.blogspot.com/2006/04/blog-post.html

மேலும்...

ம்யூஸ்:

தசரதன் மற்றும் ராவணனுக்கு இடையேயான வித்தியாசம் தெரிய வந்தது. காதலுக்கும் காமத்துக்குமுள்ள வித்தியாசத்தை விளக்கியுள்ளீர்கள்.

என்னை புரட்சிக்காரனாக வர்ணித்துள்ளீர்கள். எனக்கு தேவைகளின் மேல் இருக்குமளவுக்கு புரட்சிகளின் மேல் நம்பிக்கையில்லை.

தமிழ் நாட்டில் ஏற்கனவே ஒரு புரட்சித் தலைவரும், தலைவியும் உண்டு. அப்படியானால் நான் யார் - புரட்சி புடலைங்காயோ? எனக்கு சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை. தங்களை புரட்சிக்காரர்களாக நம்பும் மனிதர்கள் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்.

ராமன் போன்ற தெளிவான யுக புருஷர்கள் பூமியில் மிகவும் அரிது. அவன் எனக்கும் தெய்வந்தான்.

கிருபானந்த வாரியாரிடம் ஒருவர் ஏறத்தாழ இதே கேள்வியினைக் கேட்டதாகப் பல வருடங்கள் முன்பு படித்தேன். "தசரதன் மட்டும் அத்தனை மனைவியர் கொண்டிருக்கும் போது நான் மட்டும் ஒரே பெண்ணுடன் வாழ வேண்டும் என்கிறீர்களே" என்று அந்த மனிதர் கேட்டாராம். அதற்கு வாரியார் "தசரதனால் அனைத்து மனைவியரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடிந்தது. உன்னாலும் அது முடியும் என்றால் நீயும் திருமணம் செய்து கொள்ளலாம்" என்றாராம்.

நானும் தசரதன் எல்லா மனைவியரையும் ஸந்தோஷமாக வைத்துக் கொண்டான் என்பதை ஒரு நம்பிக்கையாக ஏற்றுக் கொள்கிறேன்.இருந்தாலும் என்னுடையது கேவலம் மனித மனந்தானே. சந்தேகங்கள் வரத்தான் செய்கின்றன.

என்னால் ராமன் போல் எல்லா விஷயங்களிலும் தெளிவுடனும், தர்ம சீலனாகவும் இருக்க முடியவில்லை. முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. என்னைச் சுற்றி இருப்பவர்களிடமோ, நான் அறிந்த மனிதர்களிலோ ராமன் போன்றவர்கள் இல்லை. இருக்கவும் முடியாது என்று தோன்றுகிறது. அப்படியே இருந்தாலும் அது ஒரு எக்ஸெப்ஷனல் கேஸ், முழுக்க முழுக்க தெய்வீகமானது. அனைவருக்கும் பொருத்த முடியாது.

ஆனால் தசரதன் போன்ற மேன்மையான குணங்கள் கொண்ட மனிதர்கள் உள்ளார்கள். என் அனுபவம் இதை உறுதி செய்கிறது.ஒரு கேள்வியினை என் மனம் என்னிடம் கேட்கிறது.

தசரதன் எனும் ஒரு கணவனால் ஆயிரக் கணக்கான மனைவியரை சந்தோஷமாகவும், காதலுடனும் வைத்துக் கொள்ள முடியும்போது ஒரு மனைவியால் பல கணவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியாதா? அப்படிச் செய்தால் கற்பு நிலை தவறுகிறாள் என அனைத்து மத நூல்களும், சமூக ஒழுக்கங்களும் கூறுகின்றனவே.

தங்களுடைய பதிலைப் படித்து இந்தக் குழப்பத்திலிருந்தும் விடுபட ஆசைப் படுகிறேன். தயவு செய்யுங்கள்.

=====================

என் பதில்:

தங்கள் கருத்துக்கள் மிகவும் புரட்சிகரமானவைதான். எனக்கு.

என் பதிலுரை:

1. இராமாயணத்தை கேள்வி ஞானம் தான் என்கிறீர்கள். கம்ப ராமாயணத்தை ஒரு தடவையாவது வாழ்க்கையில் படிக்குமாறு கெஞ்சுகிறேன். பக்தி இலக்கியமாக இல்லாவிட்டாலும், கம்பனின் அரசாளும் தமிழுக்காகவும், அந்த பாத்திரங்களை அவன் கையாண்டுள்ள அனுபவத்திற்காகவுமாவது.

2. தசரதன் தன் மனைவி மார்களை காதலித்து சந்தோஷப்படுத்தினான் என்று நீங்கள் எந்த அர்த்தத்தில் சொன்னீர்கள். நம் கலாசாரத்தில் கணவன் மனைவி இல்லறத்தில் கடமை மேலோங்கியிருக்கும், காதல் இருந்தாலும் தெரியாது.

தசரதன் மனைவி மார்கள் தசரதனின் ஆளுமையில் மயங்கி தன்னை சரண் கொடுத்த சாதாரண இந்திய பெண்கள். அவர்கள் சந்தோஷம் தசரதனின் சந்தோஷத்தில்தான். இதில் மாடர்ன் காதல் வரவில்லை.அச்சமுதாயம் முழுக்க முழுக்க சொசைட்டியை ஒத்து வாழ்வதே இலட்சியமாக கொண்ட சமுதாயம். அதுவே பெருமை அதுவே புகழ் என்று இருந்த நிலை. அதை மனதில் கொள்ளுங்கள்.

3. ராமன் மாதிரி வாழ்வது இயலாது என்று நீங்கள் சொல்வது ராமனை வருத்தம் அடைய செய்யும். மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று காண்பிக்கவே ராமன் அவதரித்தான் என்கின்றன புராணங்கள்.ராமன் மாதிரி வாழ்வதில் குழப்பமே இல்லை.

தனக்கு என்று இஹ வாழ்க்கையில் வேண்டுவது எல்லாம் தன் தன்மானமும் கசடற்ற புகழும் என்ற ஒரே குறிக்கோள்தான் அவன் எல்லா நடவடிக்கைகளிலும் தெரிகிறது. எதைச்செய்தால் சமுதாயத்தில் மாண்போ அதை செய்வதுதான் அவன் வாடிக்கை. அதை புரிந்து கொள்வது எளிதுதான். குழப்பமில்லை.

அவனைப்போல வாழ்வது வேண்டுமானால் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், அவன் வழி எல்லோருக்கும் புரிந்த குழப்பமில்லாத வழி.

4. பெண்களும் பல கணவருடன் 'சந்தோஷமாக' இருக்க முடியுமா என்கிறீர்கள். சந்தோஷம் என்று எதை நீங்கள் சொல்கிறீர்கள். கலவி சுகமா. மாடர்ன் லைப் காதலா. இவை இரண்டும் என்றால் நிச்சயம் முடியும். சந்தேகம் இல்லை.

ஆனால், பல கணவன் படைத்த பெண் வாழ்க்கையை இழக்கிறாள். அவள் தன்னை ஒருவனுக்கு கொடுக்கும்போது எல்லாவற்றையும் கொடுத்து விடுகிறாள். ஆண் மாதிரி பேரம் பேசுவதில்லை. தாய் மகன் உறவு ரத்த சம்பந்தத்தால் ஏற்படுவதால் அதில் பல மகன்களை தாய் தனதாக்கி கொள்ள முடிகிறது. எல்லாம் தன் உயிராகவே பார்க்கிறாள்.

ஆனால், ஆண் பெண்ணே ஏற்கும் போது தன் எதிர்பார்ப்புக்கு உட்பட்டு ஏற்கிறான். அதனால், ஆணால் பல பெண்களிடம் கலவி இன்பம் விகல்பம் இல்லாமல் பெற முடிகிறது.

அதே அவன் மனதார ஒரு பெண்ணை - அந்த பெண்ணின் உள்ளே உள்ள ஆத்மாவை - காதலிப்பான் ஆனால், அவனாலும் வேறொருத்தியை ஏறெடுத்தும் பார்க்க தோணாது. எங்கு தன்னலமில்லா காதல் மலர்கிறதோ அங்கு அவர்கள் தங்களை இழக்கிறார்கள். வேறோரு கூட்டணிக்கு அங்கே வழியில்லை.


===================

மீண்டும் ம்யூஸ்:

நீங்கள் கூறுவது அனைத்தும் எனக்குப் புரிகிறது, ஏற்றுக் கொள்கிறேன் - கடைசி பாராவை தவிர்த்து.

"அவள் தன்னை ஒருவனுக்கு கொடுக்கும்போது எல்லாவற்றையும் கொடுத்து விடுகிறாள். ஆண் மாதிரி பேரம் பேசுவதில்லை."

நம்ப முடியவில்லை. ஒரு வேளை நீங்கள் அந்தக் காலத்திலிருந்ததாகக் கருதப்படும் அபூர்வமான பத்தினிகள் என்ற ஸ்பீஸிஸ் பற்றிக் கூறுகிறீர்கள் என நினைக்கிறேன்.

தற்காலத்தைச் (கலிகாலத்தை) சேர்ந்த என்னைச் சுற்றியிருக்கும் ஆண்கள், பெண்கள் அனைவரும் பேரம் பேசுகிறார்கள் (யு. எஸ். க்ரீன் கார்ட்; கை, பாக்கெட், பீரோ, வீடு, கக்கூஸ் நிறைய பணம்). "மாப்பிள்ளை மாருதி மாதிரியிருந்தாலென்ன. மாருதி எஸ்டீம் எத்தனை இருக்கு?" என்பதுதான் குறைந்த பக்ஷ பேரமே. இதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமில்லை என்றுதான் தோன்றுகிறது.

எங்கு தன்னலமில்லா காதல் மலர்கிறதோ அங்கு அவர்கள் தங்களை இழக்கிறார்கள். வேறோரு கூட்டணிக்கு அங்கே வழியில்லை.

இயற்கையில் எல்லாமே விரிந்து கொண்டு போகின்றன. ஒருவரிடம் தன்னலமற்ற காதலும், காமமும் கொண்ட ஒருவர் அவற்றை விரித்து பல பேரிடமும் கொண்டு செல்ல விரும்ப வாய்ப்பு இருக்கிறதா? கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறதே.

இவ்விரிவு ஒருவர் மேலேயே விரிந்து கொண்டு போகும் வாய்ப்பும் இருப்பதை உணர்கிறேன். ஆனால், கூட்டணியாய் ஜெயிப்பவரைவிட தனியாக நின்று ஜெயிப்பவருக்குத்தானே மரியாதை என்று சொல்லி ஜோக்கடித்து விடாதீர்கள். கேள்வியே அந்த மரியாதை ஏன் என்பதுதான்.

தசரதனை விடுங்கள். அந்தக் காலத்தில் தசரதனுக்கு இருந்தது போல சாபமில்லாத அரசர்களும், குடிமகன்களும் பல தார மணம் புரிந்துகொண்டார்களே. முதல் மனைவிக்கும் பல ஆண் குழந்தைகளிருந்தாலும் பல திருமணங்கள் செய்து கொண்டார்களே.

எனக்குத் தெரிந்தவரை பல தார மணம் ஒரு சமுதாய கடமை இல்லை. இந்தக் காலத்திலும் இது தொடர்கிறதே. எதற்காக? ஏன் ஆண்களுக்கு மட்டும் இந்த உரிமை? மீண்டும் கூறுகிறேன். என்னால் புரட்சி எல்லாம் செய்ய முடியாது.

ஒருதார வாழ்க்கை முறை மீதும், கற்பு எனும் கொள்கை மீதும் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை எனக்கு உங்கள் மீது மரியாதையைத் தருகிறதே. ஏன்?

ஏனென்றால் நடைமுறையில் நானும் அப்படித்தான் என்பதாலிருக்கலாம். அல்லது குறைந்தபக்ஷம் இவை உயரியவை என்று எனக்கு செய்யப்பட்ட போதனைகள் அடிமனத்தில் குடிகொண்டிருப்பதால்.இன்னமும் தன் மனைவியை மட்டும் காதலிக்கும் டோண்டு மாமாவைப் பார்க்கும்போது பரவசமாகத்தான் இருக்கிறது.

இது போன்ற தம்பதிகளை நமஸ்காரம் செய்வதே நல்ல புத்தியைத் தரும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆயினும் என்னை, என் வாழ்க்கையை புரிந்து கொள்ள இவை எல்லாம் ஏன் இப்படி இருக்கின்றன என்று கேள்வி கேட்கிறேன். சில விஷயங்கள் பற்றிய புரிதல்கள் நான் ஸந்தோஷமாக இருக்கவும், உண்மையையும், நிதர்ஸனத்தையும் அறியவும் உதவுகின்றன.

வாழ்க்கை பற்றி கற்றுக் கொண்டே இருக்க ஆசை.காலமும், காலத்தால் ஏற்படும் அனுபவமும், அதை சரியாகப் புரிந்து கொள்ளும் புத்தியும் எனக்கு மேலும் கற்றுக்கொடுக்கட்டும்.

ஓம்

No comments: