Wednesday, November 21, 2007

யார் பிராமணன்?

பாண்டவர்கள் வனவாசம் செய்துகொண்டிருந்த சமயம். ஒருநாள் பீமசேனன் வனத்தின் அழகை ரசித்துக்கொண்டு உலாவிக்கொண்டிருந்தான். திடீரென்று ஒரு பெரிய மலைப்பாம்பு அவனை பிடித்து சுற்றிக்கொண்டது. அசாத்தியமான பலம் கொண்ட பீமனால் எத்தனை முயற்சித்தும் அந்த பாம்பிடமிருந்து மீள முடியவில்லை.

கொஞ்ச நேரத்தில், யுதிஷ்டிரர் தமயனை தேடி அங்கு வந்தார். பீமனின் நிலையை பார்த்து பயந்துபோனார். பாம்பிடம் பீமனை விட்டுவிடும்படி பிரார்த்தித்தார். வேறு ஏதாவது இறை கொடுத்துவிடுகிறேன் என்றார். ஆனால், அந்த சர்ப்பம் அதற்கு இணங்கவில்லை.

ஆச்சரியமாக, அந்த பாம்பு பேச ஆரம்பித்தது.

அந்த பாம்பு வேறு யாருமல்ல, பாண்டவர்களின் மூதாதயர். பூர்வீக பிறவிகளில் அந்த பாம்பு நஹூஷன் என்ற அரசன். பணமும், அதிகாரமும் சேர்ந்த செருக்கால் அந்த அரசன் பிராமணர்களை அவமதிக்கவே அகஸ்தியரின் சாபத்தால் பாம்பாக பிறந்திருந்தான்.
அந்த பாம்பு யுதிஷ்டிரரிடம் சில கேள்விகளுக்கு சரியான விடை சொன்னால் பீமனை விட்டுவிடுவதாக சொன்னது.

நஹூஷனுக்கும் யுதிஷ்டிரருக்கும் நடந்த உரையாடல் வருமாறு..

ந : எவன் பிராமணன்? எது அறியத்தகுந்தது?

யு : சத்யம், தயை, பொறுமை, நல்ல நடத்தை, பூர்ணமாக ஹிம்ஸையை விலக்குதல், புலனடக்கம், கருணை என்ற குணங்கள் கொண்டவனே பிராமணன். சுக துக்கங்களைக் கடந்த பிரம்மமே அறியத்தக்கது. அதை அறிவதால் ஒருவன் பூர்ணத்துவம் பெறுகிறான்.

ந : இந்த குணங்கள் ஒரு சூத்திரனிடம் இருந்தால் அவன் பிராமணனா? பிரம்மம் என்பது சுகதுக்கங்கள் இல்லாதது என்றால், சுகதுக்கங்களை கடந்த நிலை இருக்கும் என்று தோன்றவில்லையே!

யு : சத்தியம் முதலான நான் சொன்ன குணங்கள் ஒரு சூத்திரனிடம் இருக்குமானால் அவன் சூத்திரன் அல்லன். இந்த குணங்கள் ஒரு பிராமணரிடம் இல்லையென்றால் அவன் பிராமணன் அல்லன். ஓ, சர்ப்பமே, இந்த குணங்கள் கொண்டிருக்கும் மனிதன் பிராமணன் என்றே ஆகிறான். இக்குணங்கள் இல்லாமல் இருப்பவன் சூத்திரனே.

சுகதுக்கங்கள் இல்லாத நிலை இல்லை என்று சொல்வது கர்மத்தால் விளைந்த அனைத்துக்கும் பொருந்தும். நீர் எப்படி இயற்கையில் உஷ்ணமாகாதோ, நெருப்பு எப்படி இயற்கையில் குளிர்ந்திருக்காதோ அப்படியே அறியாமை அகன்ற சத்தியத்தில் சுகதுக்கங்கள் இல்லை.

ந : குணங்களே பிராமணனை தீர்மானிக்குமானால், இக்குணங்கள் இல்லா பிராமணின் பிறப்பு முக்கியமற்று போகிறதே.

யு : பல குணங்கள் கலந்துவிட்ட இக்காலத்தில் பிறப்பால் பிராமணனை காண்பது கஷ்டம். எல்லாரும் பிறப்பில் சூத்திரர்களே. சில சம்ஸ்காரங்களாலும், வேதம் படிப்பதாலும் பிராமண குணங்கள் கிடைத்து பிராமணனாகிறான். ஸ்வாயம்புவ மனு சொல்வதும் இப்படியே. எல்லா சம்ஸ்காரங்களும் செய்தும், வேதம் படித்தும் அவனுக்கு இக்குணங்கள் கொள்ளாவிட்டால் அவன் பல குணங்கள் கலந்தவன் என்று அறிந்துகொள். சாத்திரங்களின் முடிவான தீர்மானம் இது. தன் சம்ஸ்காரங்களால் நற்குணங்கள் மேலெழும்பி இருப்பவனே பிராமணன்.

யுதிஷ்டிரனின் இந்த பதில்களால் சந்தோஷப்பட்ட நகுஷன் பீமசேனனை விடுவிக்கிறான்.

- மகாபாரத இதிஹாஸம். தத்வலோகா பத்திரிக்கையில் 1993 ஜனவரியில் பிரசுரமானதின் மறுமீட்பு இங்கே.