Wednesday, November 21, 2007

யார் பிராமணன்?

பாண்டவர்கள் வனவாசம் செய்துகொண்டிருந்த சமயம். ஒருநாள் பீமசேனன் வனத்தின் அழகை ரசித்துக்கொண்டு உலாவிக்கொண்டிருந்தான். திடீரென்று ஒரு பெரிய மலைப்பாம்பு அவனை பிடித்து சுற்றிக்கொண்டது. அசாத்தியமான பலம் கொண்ட பீமனால் எத்தனை முயற்சித்தும் அந்த பாம்பிடமிருந்து மீள முடியவில்லை.

கொஞ்ச நேரத்தில், யுதிஷ்டிரர் தமயனை தேடி அங்கு வந்தார். பீமனின் நிலையை பார்த்து பயந்துபோனார். பாம்பிடம் பீமனை விட்டுவிடும்படி பிரார்த்தித்தார். வேறு ஏதாவது இறை கொடுத்துவிடுகிறேன் என்றார். ஆனால், அந்த சர்ப்பம் அதற்கு இணங்கவில்லை.

ஆச்சரியமாக, அந்த பாம்பு பேச ஆரம்பித்தது.

அந்த பாம்பு வேறு யாருமல்ல, பாண்டவர்களின் மூதாதயர். பூர்வீக பிறவிகளில் அந்த பாம்பு நஹூஷன் என்ற அரசன். பணமும், அதிகாரமும் சேர்ந்த செருக்கால் அந்த அரசன் பிராமணர்களை அவமதிக்கவே அகஸ்தியரின் சாபத்தால் பாம்பாக பிறந்திருந்தான்.
அந்த பாம்பு யுதிஷ்டிரரிடம் சில கேள்விகளுக்கு சரியான விடை சொன்னால் பீமனை விட்டுவிடுவதாக சொன்னது.

நஹூஷனுக்கும் யுதிஷ்டிரருக்கும் நடந்த உரையாடல் வருமாறு..

ந : எவன் பிராமணன்? எது அறியத்தகுந்தது?

யு : சத்யம், தயை, பொறுமை, நல்ல நடத்தை, பூர்ணமாக ஹிம்ஸையை விலக்குதல், புலனடக்கம், கருணை என்ற குணங்கள் கொண்டவனே பிராமணன். சுக துக்கங்களைக் கடந்த பிரம்மமே அறியத்தக்கது. அதை அறிவதால் ஒருவன் பூர்ணத்துவம் பெறுகிறான்.

ந : இந்த குணங்கள் ஒரு சூத்திரனிடம் இருந்தால் அவன் பிராமணனா? பிரம்மம் என்பது சுகதுக்கங்கள் இல்லாதது என்றால், சுகதுக்கங்களை கடந்த நிலை இருக்கும் என்று தோன்றவில்லையே!

யு : சத்தியம் முதலான நான் சொன்ன குணங்கள் ஒரு சூத்திரனிடம் இருக்குமானால் அவன் சூத்திரன் அல்லன். இந்த குணங்கள் ஒரு பிராமணரிடம் இல்லையென்றால் அவன் பிராமணன் அல்லன். ஓ, சர்ப்பமே, இந்த குணங்கள் கொண்டிருக்கும் மனிதன் பிராமணன் என்றே ஆகிறான். இக்குணங்கள் இல்லாமல் இருப்பவன் சூத்திரனே.

சுகதுக்கங்கள் இல்லாத நிலை இல்லை என்று சொல்வது கர்மத்தால் விளைந்த அனைத்துக்கும் பொருந்தும். நீர் எப்படி இயற்கையில் உஷ்ணமாகாதோ, நெருப்பு எப்படி இயற்கையில் குளிர்ந்திருக்காதோ அப்படியே அறியாமை அகன்ற சத்தியத்தில் சுகதுக்கங்கள் இல்லை.

ந : குணங்களே பிராமணனை தீர்மானிக்குமானால், இக்குணங்கள் இல்லா பிராமணின் பிறப்பு முக்கியமற்று போகிறதே.

யு : பல குணங்கள் கலந்துவிட்ட இக்காலத்தில் பிறப்பால் பிராமணனை காண்பது கஷ்டம். எல்லாரும் பிறப்பில் சூத்திரர்களே. சில சம்ஸ்காரங்களாலும், வேதம் படிப்பதாலும் பிராமண குணங்கள் கிடைத்து பிராமணனாகிறான். ஸ்வாயம்புவ மனு சொல்வதும் இப்படியே. எல்லா சம்ஸ்காரங்களும் செய்தும், வேதம் படித்தும் அவனுக்கு இக்குணங்கள் கொள்ளாவிட்டால் அவன் பல குணங்கள் கலந்தவன் என்று அறிந்துகொள். சாத்திரங்களின் முடிவான தீர்மானம் இது. தன் சம்ஸ்காரங்களால் நற்குணங்கள் மேலெழும்பி இருப்பவனே பிராமணன்.

யுதிஷ்டிரனின் இந்த பதில்களால் சந்தோஷப்பட்ட நகுஷன் பீமசேனனை விடுவிக்கிறான்.

- மகாபாரத இதிஹாஸம். தத்வலோகா பத்திரிக்கையில் 1993 ஜனவரியில் பிரசுரமானதின் மறுமீட்பு இங்கே.

12 comments:

Sri Srinivasan V said...

thank you very much Sir,
very kind of you.
warm regards.
srinivasan.

sury siva said...

கீதையில் நான்கு வர்ணங்களைப்பற்றி ப்பேசப்படும்போது, அந்த 4 வர்ணங்கள் யாவை என விளக்கம்
உபனிஷத்துகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அந்தணன் என்போன் அறிவோன் என வள்ளூவர் வாய்மொழிக்கேற்ப, ஒருவன் வேத மறைகள், நீதி சாத்திரங்கள் யாவற்றையும் கற்றுணர்வது மட்டுமல்ல, அந்த மறைகளையும் சாத்திரங்களையும், நீதி புகட்டும் நன்னூல்களையும், புவியிற் பிறந்தோர் எல்லோருக்கும் எந்த விதமான லாபத்தினையும் எதிர் பார்க்காது, அந்த நூல்களையும் சாத்திரங்களையும், சாத்திரங்கள் சொல்லும் சடங்குகளையும் அவற்றினைக் கற்க தெளிந்த மனத்துடன் வரும் யாவருக்கும் அக்கல்வியைபுகட்டி , அற வாழ்வு வாழ்பவன் அந்தணன் ஆகிறான். இப்படிப்பட்ட அந்தணன் பிரமத்தை அறிய முற்பட்டு, பிரமச்சரிய வழியில் நின்று பிரும்மத்தை தன் இதய ஆகாசத்தில் என்னேரமும் தியானித்துக்கொண்டிருப்பவனன் பிராமணன் ஆகிறான்.
விசுவாமித்திரர் குலத்தால் பிராமணன் அல்ல. இருப்பினும், அரச பதவியைத் துறந்து, மேலே கண்ட தவ நோன்புகளில் தன்னை அற்பணித்திக்கொண்டு, நான் எனும் மதத்தைத்துறந்து தியானத்திலே ஈடுபட்டதால் தான்
அவர் ராஜ ரிஷி எனப்பட்டார்.
இதே போல், எந்த ஒரு குடும்பத்தில் பிறப்பினும், மக்களை நிர்வகித்து அவர்களைக் காத்து, அவர்கட்கு வேண்டிய பொருளாதார நலன்களுக்காக சமுகத்தினைக் காப்பது மட்டுமே தனது தொழிலாகக் கொண்டவர் க்ஷத்திரியர் ஆவர்.
மூன்றாவதாக, பொருட்களை உற்பத்திசெய்து, அவற்றின் வியாபாரம் செய்யும் மக்கள் வைசியர் எனப்படுவர்.

மேற்கூறிய மூவரும் தாம் தாம் தேர்ந்தெடுக்கும் தொழிலால் தான் ஒரு குறிப்பிட்ட வர்ணத்தைச் சேர்ந்தவர் ஆகிறார் தவிர பிறப்பால் அல்ல.

இந்த மூவருக்கும் சாத்திரங்கள் எவ்வாறான கருமங்கள், சட்ங்குகளைச் செய்ய வேண்டுமென நீதி நூல்கள் வர்ணிக்கின்றன்.

எவனொருவன், இந்த மூவகையிலும் கட்டுப்படாதவனாக, பிரிந்து செல்கிறானோ அவன் நான்காவது வர்ணத்தை ச்சேர்ந்தவன் ஆகிறான்.

ஆகவே ஒரு குறிப்பிட்ட வர்ணமோ அல்லது இந்த மூன்று வகையில் சேராததோ பிறப்பால் இல்லை. இல்லை.
ஒரே குடும்பத்தில் ஒருவன் க்ஷத்திரியன் ஆகவும், ஒருவன் வைசியன் ஆகவும், இன்னொருவன் பிராமணன் ஆகவும், இன்னும் ஒருவன் இந்த வகையினில் எதையும் மேற்கொள்ளாது நான்காவது வர்ணத்தினைச் சார்ந்து இருக்கவும் கூடும்.

சாந்தோக்கிய உபனிஷத்தின் கருத்துக்கள் மிக தெள்ளத்தெளிவாக இதை கூறுகின்றன்.
இன்னமும் சொல்லப்போனால்,உபனிஷத்துக்களில் கர்ம காண்டத்தில் குறிப்பிடப்பட்ட சடங்குகள் இந்த மூவருக்கும் பொதுவானவை.
People choose their varnas. Varnas do not choose the people. So if one by his own choice, chooses not to abide by the scriptures and do the duties of the respective field, such as Kshatrias,vysyas or Brahmanas, he is classified in the 4th varna and thereafter he is not bound by such duties.
கிருத யுகம் த்ரேதா யுகம் போன்ற கால கட்டங்களில் மனிதர் வாழ்ந்த வாழ்வினை இந்த இதிகாச புராணங்கள், மறைசார் நூல்கள் குறிப்பிடுகின்றன. It is futile to compare the present society with those who lived some hundreds and thousands of years ago.
For all men in this world, there is one single Upadesha by Adi Sankara.
Matha cha paarvathi devi, pitha devo maheswaraha. Bhandavah shiva bhaktha cha, swadesham bhuvana thrayam.
Onre kulam Oruvane thevan
Thelliar sinthithavaaru.

By sheer accident, i landed in your blog. Well written and composed.
God Bless you and your family.
Surya narayanan.
Please visit at your leisure

http://vazhvuneri.blogspot.com

Anonymous said...

// பணமும், அதிகாரமும் சேர்ந்த செருக்கால் அந்த அரசன் பிராமணர்களை அவமதிக்கவே அகஸ்தியரின் சாபத்தால் பாம்பாக பிறந்திருந்தான்.// சப்தரிஷிகளை அவமதித்ததால் அல்லவோ நஹூஷன் பாம்பாக மாறியதாக கேள்விப் பட்டிருந்தேன். நீங்கள் சொல்வது புதுமையாக உள்ளதே...

sury siva said...

//சப்தரிஷிகளை அவமதித்ததால் அல்லவோ நஹூஷன் பாம்பாக மாறியதாக கேள்விப் பட்டிருந்தேன்.//
சந்திரா மேடம் சொல்வது நூறு சதவிகிதம் சரியே. இருப்பினும், இந்தக்காலத்தில்
புராண இதிகாச கதைகளையும் அவரவர் கொள்கைக்கேட்ப மாற்றியமைக்கும் 'ஜன நாயக" உரிமையும் உள்ளதாகவே தெரிகிறது.
சிவ.சூ. நா.
சென்னை.

அழிப்பான் said...

very nice explanation .

கானகம் said...

Though I read this somewhere, reading again makes remembering the same..Thanks a lot..

திவாண்ணா said...

கேள்விப்படாத "கதை". கருத்து ஏற்கக்கூடியதே. பிறக்கும்போது பிராம்ஹண தகுதி அடையும் வாய்ப்பு மட்டுமே உள்ளது. சம்ஸ்காரமே பிரதானம். சூரி சாரும் அழகாக சொல்லி இருக்கார்.

dondu(#11168674346665545885) said...

//யுதிஷ்டிரர் தமயனை தேடி அங்கு வந்தார்.//
யுதிஷ்டிரர்தான் தமையன். பீமன் அவர் தம்பி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கபீரன்பன் said...

பல நல்ல விஷயங்கள் கொண்ட தங்கள் வலைப்பூ அடிக்கடி வாசகர் பார்வைக்கு வரவேண்டும்.

அதற்கு இந்த வலைப்பூவை தேன்சிட்டு வளையத்தில் ஆன்மீகப்பிரிவில் சேர்த்து விடுங்களேன்.
தங்கள் பணி தொடரட்டும்.
நன்றி

ஜயராமன் said...

டோண்டு சார்,

///யுதிஷ்டிரர்தான் தமையன். பீமன் அவர் தம்பி.////

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. தமையன் என்றால் தம்பி என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ;-))

நன்றி

ஜயராமன்

luckyboyssvr said...

யார் பிராமணன் என்று நன்கு புரிய வைத்தீர்கள், ஆனால் இது எப்போது/எப்படி நடைமுறைபடுத்துவது, எது சாஸ்திரம் எது மூட நம்பிக்கை என்று தெரியாமல் காலத்திற்கு ஏற்ப மாறாமல் தவறு என்று தெரியாமல் தவறான வழியில் சென்று கொண்டிருக்கும் நம் மக்களுக்கு எப்படி புரிய வைப்பது?

Anonymous said...

சார்
நமஸ்காரம்.
இந்த பதிவை இன்று மீண்டும் படித்தேன்.
நன்றி.
மிகுந்த நன்றி.
வந்தனம்.
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.