Sunday, April 30, 2006

இந்து மதத்தில் பல தைவம் உண்டா?

வேத்த்தை பற்றியும், அது சொல்லுகிற கர்மாக்களை பற்றியும், அந்த கர்மங்களால் ஆராதிக்கப்படுகிற தேவதைகளைப் பற்றியும் மேல் தேசத்தாரும், பிற மதக்கார்ர்களும் பல மறுப்புகளை சொல்லுகிறார்கள்.

அவைகளுக்கு சரியான பதிலை சொல்ல வேண்டியது.

அவைகளில், முதலாவது மறுப்பு. “நாம் பல தைவங்களைப் பூஜை செய்கிறோம். தங்களைப் போல ஒரே தெய்வத்தை நம்புகிறதில்லை – என்பது.

நாம் பல தேவதைகளுக்கு பூஜை செய்து, அவர்களை சந்தோஷப்படுத்தி, அவர்களிடமிருந்து நமக்கு வேண்டிய பலன்களைப் பெறுகிறோம். இது உண்மையே.

ஆனால், இவர்கள் தைவமன்று; தைவம் ஒன்றுதான். (ஏகம் சத் – ரிக்வேதம்) தேவதைகள் மனிதர்களான நம்மைப்போலதான். கர்மத்தினால் கட்டுப்பட்டவர்கள். முன்பிறப்புகளில் செய்த புண்ணியங்களாலே சில அதிகாரங்களைப் பெற்றிருக்கிறார்கள்.

அவர்கள் தைவம் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் என்றால் – வேதத்தையே பார்ப்போம். தேவதைகளுக்கு யஜமானன் இந்திரன். அவன் விருத்திரன் என்ற அஸூரனைக் கொன்ற காலத்தில், அவனுடைய இந்திரியங்களின் சக்தி போய்விட்டது. பிரும்மாவிடம் முறையிட்டுக்கொண்டான். அவர் பால் யாகத்தையும், தயிர் யாகத்தையும் செய்யும்படி உத்திரவு பண்ணினார். அவைகளால் அவனுக்கு சக்தி திரும்பிவந்து, திருப்தி உண்டாயிற்று (யஜூர். அஷ்ட-2, ப்ர-5, அநு-3)

இன்னொரு உதாரணம். ஒரு காலத்தில் யாகம் பண்ணும்போது ருத்திரன் என்ற தேவதையை மறந்துபோய் ஹவிஸ்ஸை கொடுக்கவில்லை. அவன் கோபித்துக்கொண்டு ஆதித்தியர்கள் என்கிற தேவதைகளை தொந்தரவு செய்தான்.

மேலும்....

மித்திரன் என்ற தேவதை யாகங்களில் சரியாய் செய்யப்பட்டதற்கு யஜமானன். வருணன் என்கிற தேவதை கெடுதலாய் செய்யப்பட்டதற்கு யஜமானன். இவர்கள் இருவரையும் யாகம் செய்கிறவன் சந்தோஷப்படுத்தாவிட்டால், நன்றாய் செய்த அங்கத்தை நன்றாக செய்யப்படாத அங்கத்துடன் சேர்ப்பார்கள். அல்லது அங்கங்களை நன்றாய் செய்யாதபடி செய்வர்கள். ( யஜூர். கா-6, பிர-6, அநு-7)

இப்படி மனிதர்களைப் போல சக்தி இழக்கிறவர்களையும், கெடுதல் செய்கிறவர்களையும் தைவம் என்று புத்தியுள்ளவன் எவன் சொல்லுவான்? ஆகையினால், நம்மைப்பற்றி மேல் தேசத்தார் சொல்லும் குற்றத்துக்கு இடமேயில்லை.

இதன்மேல் ஒரு கேள்வி... தேவதைகள் தைவமன்று என்று சொன்னீரே? அவர்களை ஏன் பூஜிக்கவேண்டும்?

நம்முடைய ராஜா டெல்லியில், அவருடைய பிரதிநிதி ஏதோ மெட்ராஸில் ராஜபவனத்தில் இருக்கிறார்களே, நமக்கு வேண்டியவைகளைப்பற்றி அவர்களை கேட்காமல் கீழ் உத்தியோகஸ்தர்களை ஏன் கேட்கிறோம்? கிராமத்தில் தரிசு நிலத்தை சாகுபடி செய்ய ஆசைப்படுகிறவன் தாசில்தாருக்கு ஏன் மனு செய்து கொள்ளுகிறான்?

ஏன் என்றால், ராஜாவின் பிரதிநிதிக்கு கீழே உத்தியோகஸ்தர்களை படிப்படியாக வைத்து, அவர்களுக்கு சில அதிகாரங்களைக் கொடுத்து, அவைகளுக்கு தகுந்தபடி அந்தந்த உத்யோகஸ்தர்களுக்கு மனு செய்து கொள்ளும்படி ஏற்பாடு செய்திருக்கிறது.

ஆகையால், சில விஷயங்களில் தாசில்தாரையும், சிலவற்றில் கலெக்டரையும், சில விஷயங்களில் கவர்னரையும் ஜனங்கள் கேட்கிறார்கள்.

இதுபோல, தைவமானது, நாலுமுக பிரும்மா முதல் அனைகம் அதிகாரிகளை வைத்து அவர்களுக்கு மனிதர்களை காட்டிலும் அதிகமான அறிவையும் சக்தியையும் கொடுத்திருக்கிறது.

ஜனங்கள் அவர்களை பூஜை செய்து தங்களுக்கு வேண்டிய பிரயோஜனங்களை அடையட்டும் என்றும் ஏற்பாடு செய்திருக்கிறது.

இது வேறும் யூகமில்லை. பகவத்கீதையில் கிருஷ்ணனே இப்படி சொல்லியிருக்கிறார். “பகவான் உலகங்களை மறுபடியும் உண்டுபண்ணி, அவர்களுக்கு உடம்புகளையும், இந்திரியங்களையும் கொடுத்து ........ யாகங்களையும் ஏற்படுத்தி, அவர்களை பார்த்து, இந்த (யாக) செயல்களால் நீங்கள் நலம் பெறுங்கள். ........ எனக்கு உடம்புகளான தேவதைகளை இந்த வேள்விகளினால் சந்தோஷப்படுத்துங்கள்... யாகத்தினால் சந்தோஷப்பட்ட தேவதைகள் தாங்கள் மீண்டும் சந்தோஷப்பட வேண்டிய எல்லாவற்றையும் தங்களுக்கு கொடுப்பார்கள்.. “ (அத்தி-3, சு-10,11) என்று.

ஆனால், மனிதனுக்கும் தைவத்துக்கும் வித்தியாசமில்லையா? ராஜாவுக்கு எல்லோருடைய குறைகளை கேட்க முடியாது. ஆனால், தைவம் அப்படியில்லையே? அதற்கு எல்லாம் தெரியும். எதையும் செய்ய சக்தி உண்டு. அதை தடுப்பார் யாருமில்லை. ஆகையாலே எல்லோரும் அதையே கேட்கலாமே? என்று கேட்டால்...

இதற்கு பதில்.....


தைவம் எது நமக்கு நல்லதோ அதையே செய்யும். ஒரு நல்ல தகப்பன் – பிள்ளை கொய்யாப்பழம் வேணும் என்று கேட்டால், அதை வாங்கிக் கொடுப்பதில்லை. படிக்க புஸ்தகம் வேண்டும் என்றால், உடனே அதை வாங்கிக் கொடுக்கிறான். அதுபோல, ஒருவன் மோக்ஷம் வேண்டும் என்று முறைப்படி கேட்டால், கேட்ட காலத்தில் தைவம் அதைக் கொடுக்கிறது. (மோக்ஷத்தை கொடுக்க அந்த தைவத்தால் மட்டுமே முடியும். தேவதைகளால் அன்று...) இந்த உலகத்திலாவது, சுவர்க்கத்திலாவது அனுபவிக்க கூடிய சுகங்களை கேட்டால் உடனே கொடுப்பதில்லை.

தைவத்தினுடைய இந்த அபிப்ராயத்தை தெரியாமல், ஜனங்கள் எப்படியாவது தங்களுக்கு வேண்டிய பலன்களை அடைய முயற்சி செய்வார்கள். தகாத வழியில் போய் கெட்டுப் போவார்கள். இதை நினைத்து, தேவதைகளுக்கு அதிகாரம் கொடுத்து அவர்களை கொண்டு மக்களுக்கு திருப்தி பண்ணி வைக்கிறது.

(மேலும் வரும்...)

- ஸ்ரீ உ.வே. V.K. ராமநுஜாச்சார்யர் ஸ்வாமி உரையிலிருந்து ஒரு பகுதி...

Monday, April 24, 2006

ராவணனும் தசரதனும் - 2

ம்யூஸ் அவர்களுடன் விவாதம் மேலும் தொடர்கிறது.

முதல் பாகத்தை இங்கே பார்த்தோம்:

http://vaithikasri.blogspot.com/2006/04/blog-post.html

மேலும்...

ம்யூஸ்:

தசரதன் மற்றும் ராவணனுக்கு இடையேயான வித்தியாசம் தெரிய வந்தது. காதலுக்கும் காமத்துக்குமுள்ள வித்தியாசத்தை விளக்கியுள்ளீர்கள்.

என்னை புரட்சிக்காரனாக வர்ணித்துள்ளீர்கள். எனக்கு தேவைகளின் மேல் இருக்குமளவுக்கு புரட்சிகளின் மேல் நம்பிக்கையில்லை.

தமிழ் நாட்டில் ஏற்கனவே ஒரு புரட்சித் தலைவரும், தலைவியும் உண்டு. அப்படியானால் நான் யார் - புரட்சி புடலைங்காயோ? எனக்கு சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை. தங்களை புரட்சிக்காரர்களாக நம்பும் மனிதர்கள் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்.

ராமன் போன்ற தெளிவான யுக புருஷர்கள் பூமியில் மிகவும் அரிது. அவன் எனக்கும் தெய்வந்தான்.

கிருபானந்த வாரியாரிடம் ஒருவர் ஏறத்தாழ இதே கேள்வியினைக் கேட்டதாகப் பல வருடங்கள் முன்பு படித்தேன். "தசரதன் மட்டும் அத்தனை மனைவியர் கொண்டிருக்கும் போது நான் மட்டும் ஒரே பெண்ணுடன் வாழ வேண்டும் என்கிறீர்களே" என்று அந்த மனிதர் கேட்டாராம். அதற்கு வாரியார் "தசரதனால் அனைத்து மனைவியரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடிந்தது. உன்னாலும் அது முடியும் என்றால் நீயும் திருமணம் செய்து கொள்ளலாம்" என்றாராம்.

நானும் தசரதன் எல்லா மனைவியரையும் ஸந்தோஷமாக வைத்துக் கொண்டான் என்பதை ஒரு நம்பிக்கையாக ஏற்றுக் கொள்கிறேன்.இருந்தாலும் என்னுடையது கேவலம் மனித மனந்தானே. சந்தேகங்கள் வரத்தான் செய்கின்றன.

என்னால் ராமன் போல் எல்லா விஷயங்களிலும் தெளிவுடனும், தர்ம சீலனாகவும் இருக்க முடியவில்லை. முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. என்னைச் சுற்றி இருப்பவர்களிடமோ, நான் அறிந்த மனிதர்களிலோ ராமன் போன்றவர்கள் இல்லை. இருக்கவும் முடியாது என்று தோன்றுகிறது. அப்படியே இருந்தாலும் அது ஒரு எக்ஸெப்ஷனல் கேஸ், முழுக்க முழுக்க தெய்வீகமானது. அனைவருக்கும் பொருத்த முடியாது.

ஆனால் தசரதன் போன்ற மேன்மையான குணங்கள் கொண்ட மனிதர்கள் உள்ளார்கள். என் அனுபவம் இதை உறுதி செய்கிறது.ஒரு கேள்வியினை என் மனம் என்னிடம் கேட்கிறது.

தசரதன் எனும் ஒரு கணவனால் ஆயிரக் கணக்கான மனைவியரை சந்தோஷமாகவும், காதலுடனும் வைத்துக் கொள்ள முடியும்போது ஒரு மனைவியால் பல கணவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியாதா? அப்படிச் செய்தால் கற்பு நிலை தவறுகிறாள் என அனைத்து மத நூல்களும், சமூக ஒழுக்கங்களும் கூறுகின்றனவே.

தங்களுடைய பதிலைப் படித்து இந்தக் குழப்பத்திலிருந்தும் விடுபட ஆசைப் படுகிறேன். தயவு செய்யுங்கள்.

=====================

என் பதில்:

தங்கள் கருத்துக்கள் மிகவும் புரட்சிகரமானவைதான். எனக்கு.

என் பதிலுரை:

1. இராமாயணத்தை கேள்வி ஞானம் தான் என்கிறீர்கள். கம்ப ராமாயணத்தை ஒரு தடவையாவது வாழ்க்கையில் படிக்குமாறு கெஞ்சுகிறேன். பக்தி இலக்கியமாக இல்லாவிட்டாலும், கம்பனின் அரசாளும் தமிழுக்காகவும், அந்த பாத்திரங்களை அவன் கையாண்டுள்ள அனுபவத்திற்காகவுமாவது.

2. தசரதன் தன் மனைவி மார்களை காதலித்து சந்தோஷப்படுத்தினான் என்று நீங்கள் எந்த அர்த்தத்தில் சொன்னீர்கள். நம் கலாசாரத்தில் கணவன் மனைவி இல்லறத்தில் கடமை மேலோங்கியிருக்கும், காதல் இருந்தாலும் தெரியாது.

தசரதன் மனைவி மார்கள் தசரதனின் ஆளுமையில் மயங்கி தன்னை சரண் கொடுத்த சாதாரண இந்திய பெண்கள். அவர்கள் சந்தோஷம் தசரதனின் சந்தோஷத்தில்தான். இதில் மாடர்ன் காதல் வரவில்லை.அச்சமுதாயம் முழுக்க முழுக்க சொசைட்டியை ஒத்து வாழ்வதே இலட்சியமாக கொண்ட சமுதாயம். அதுவே பெருமை அதுவே புகழ் என்று இருந்த நிலை. அதை மனதில் கொள்ளுங்கள்.

3. ராமன் மாதிரி வாழ்வது இயலாது என்று நீங்கள் சொல்வது ராமனை வருத்தம் அடைய செய்யும். மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று காண்பிக்கவே ராமன் அவதரித்தான் என்கின்றன புராணங்கள்.ராமன் மாதிரி வாழ்வதில் குழப்பமே இல்லை.

தனக்கு என்று இஹ வாழ்க்கையில் வேண்டுவது எல்லாம் தன் தன்மானமும் கசடற்ற புகழும் என்ற ஒரே குறிக்கோள்தான் அவன் எல்லா நடவடிக்கைகளிலும் தெரிகிறது. எதைச்செய்தால் சமுதாயத்தில் மாண்போ அதை செய்வதுதான் அவன் வாடிக்கை. அதை புரிந்து கொள்வது எளிதுதான். குழப்பமில்லை.

அவனைப்போல வாழ்வது வேண்டுமானால் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், அவன் வழி எல்லோருக்கும் புரிந்த குழப்பமில்லாத வழி.

4. பெண்களும் பல கணவருடன் 'சந்தோஷமாக' இருக்க முடியுமா என்கிறீர்கள். சந்தோஷம் என்று எதை நீங்கள் சொல்கிறீர்கள். கலவி சுகமா. மாடர்ன் லைப் காதலா. இவை இரண்டும் என்றால் நிச்சயம் முடியும். சந்தேகம் இல்லை.

ஆனால், பல கணவன் படைத்த பெண் வாழ்க்கையை இழக்கிறாள். அவள் தன்னை ஒருவனுக்கு கொடுக்கும்போது எல்லாவற்றையும் கொடுத்து விடுகிறாள். ஆண் மாதிரி பேரம் பேசுவதில்லை. தாய் மகன் உறவு ரத்த சம்பந்தத்தால் ஏற்படுவதால் அதில் பல மகன்களை தாய் தனதாக்கி கொள்ள முடிகிறது. எல்லாம் தன் உயிராகவே பார்க்கிறாள்.

ஆனால், ஆண் பெண்ணே ஏற்கும் போது தன் எதிர்பார்ப்புக்கு உட்பட்டு ஏற்கிறான். அதனால், ஆணால் பல பெண்களிடம் கலவி இன்பம் விகல்பம் இல்லாமல் பெற முடிகிறது.

அதே அவன் மனதார ஒரு பெண்ணை - அந்த பெண்ணின் உள்ளே உள்ள ஆத்மாவை - காதலிப்பான் ஆனால், அவனாலும் வேறொருத்தியை ஏறெடுத்தும் பார்க்க தோணாது. எங்கு தன்னலமில்லா காதல் மலர்கிறதோ அங்கு அவர்கள் தங்களை இழக்கிறார்கள். வேறோரு கூட்டணிக்கு அங்கே வழியில்லை.


===================

மீண்டும் ம்யூஸ்:

நீங்கள் கூறுவது அனைத்தும் எனக்குப் புரிகிறது, ஏற்றுக் கொள்கிறேன் - கடைசி பாராவை தவிர்த்து.

"அவள் தன்னை ஒருவனுக்கு கொடுக்கும்போது எல்லாவற்றையும் கொடுத்து விடுகிறாள். ஆண் மாதிரி பேரம் பேசுவதில்லை."

நம்ப முடியவில்லை. ஒரு வேளை நீங்கள் அந்தக் காலத்திலிருந்ததாகக் கருதப்படும் அபூர்வமான பத்தினிகள் என்ற ஸ்பீஸிஸ் பற்றிக் கூறுகிறீர்கள் என நினைக்கிறேன்.

தற்காலத்தைச் (கலிகாலத்தை) சேர்ந்த என்னைச் சுற்றியிருக்கும் ஆண்கள், பெண்கள் அனைவரும் பேரம் பேசுகிறார்கள் (யு. எஸ். க்ரீன் கார்ட்; கை, பாக்கெட், பீரோ, வீடு, கக்கூஸ் நிறைய பணம்). "மாப்பிள்ளை மாருதி மாதிரியிருந்தாலென்ன. மாருதி எஸ்டீம் எத்தனை இருக்கு?" என்பதுதான் குறைந்த பக்ஷ பேரமே. இதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமில்லை என்றுதான் தோன்றுகிறது.

எங்கு தன்னலமில்லா காதல் மலர்கிறதோ அங்கு அவர்கள் தங்களை இழக்கிறார்கள். வேறோரு கூட்டணிக்கு அங்கே வழியில்லை.

இயற்கையில் எல்லாமே விரிந்து கொண்டு போகின்றன. ஒருவரிடம் தன்னலமற்ற காதலும், காமமும் கொண்ட ஒருவர் அவற்றை விரித்து பல பேரிடமும் கொண்டு செல்ல விரும்ப வாய்ப்பு இருக்கிறதா? கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறதே.

இவ்விரிவு ஒருவர் மேலேயே விரிந்து கொண்டு போகும் வாய்ப்பும் இருப்பதை உணர்கிறேன். ஆனால், கூட்டணியாய் ஜெயிப்பவரைவிட தனியாக நின்று ஜெயிப்பவருக்குத்தானே மரியாதை என்று சொல்லி ஜோக்கடித்து விடாதீர்கள். கேள்வியே அந்த மரியாதை ஏன் என்பதுதான்.

தசரதனை விடுங்கள். அந்தக் காலத்தில் தசரதனுக்கு இருந்தது போல சாபமில்லாத அரசர்களும், குடிமகன்களும் பல தார மணம் புரிந்துகொண்டார்களே. முதல் மனைவிக்கும் பல ஆண் குழந்தைகளிருந்தாலும் பல திருமணங்கள் செய்து கொண்டார்களே.

எனக்குத் தெரிந்தவரை பல தார மணம் ஒரு சமுதாய கடமை இல்லை. இந்தக் காலத்திலும் இது தொடர்கிறதே. எதற்காக? ஏன் ஆண்களுக்கு மட்டும் இந்த உரிமை? மீண்டும் கூறுகிறேன். என்னால் புரட்சி எல்லாம் செய்ய முடியாது.

ஒருதார வாழ்க்கை முறை மீதும், கற்பு எனும் கொள்கை மீதும் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை எனக்கு உங்கள் மீது மரியாதையைத் தருகிறதே. ஏன்?

ஏனென்றால் நடைமுறையில் நானும் அப்படித்தான் என்பதாலிருக்கலாம். அல்லது குறைந்தபக்ஷம் இவை உயரியவை என்று எனக்கு செய்யப்பட்ட போதனைகள் அடிமனத்தில் குடிகொண்டிருப்பதால்.இன்னமும் தன் மனைவியை மட்டும் காதலிக்கும் டோண்டு மாமாவைப் பார்க்கும்போது பரவசமாகத்தான் இருக்கிறது.

இது போன்ற தம்பதிகளை நமஸ்காரம் செய்வதே நல்ல புத்தியைத் தரும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆயினும் என்னை, என் வாழ்க்கையை புரிந்து கொள்ள இவை எல்லாம் ஏன் இப்படி இருக்கின்றன என்று கேள்வி கேட்கிறேன். சில விஷயங்கள் பற்றிய புரிதல்கள் நான் ஸந்தோஷமாக இருக்கவும், உண்மையையும், நிதர்ஸனத்தையும் அறியவும் உதவுகின்றன.

வாழ்க்கை பற்றி கற்றுக் கொண்டே இருக்க ஆசை.காலமும், காலத்தால் ஏற்படும் அனுபவமும், அதை சரியாகப் புரிந்து கொள்ளும் புத்தியும் எனக்கு மேலும் கற்றுக்கொடுக்கட்டும்.

ஓம்

Wednesday, April 19, 2006

ராவணனும் தசரதனும்

திரு ம்யூஸ் அவர்கள் தன் ஒரு பதிப்பில் கற்பு என்றொரு விவாத்த்தில் எனக்கு தெரிந்த அபிப்ராயத்தை முன் வைத்தேன். அவர் திடீரென்று கம்ப்ளீட்டாக புதிதாக ஒரு குண்டை போட்டார். அதாவது (அ) ராமணனும் தசரதனும் ஒரே தவறைதான் செய்தார்கள் (ஆ) ராமன் தசரதன் நடத்தைக்கு வெட்கப்பட்டான் என்று.

அவர் பதிப்பும் என் பதிலும் வருமாறு:

ம்யூஸ்:

ராமாயணத்தில் எனக்கு எழும் ஒரு சந்தேகம். ஸ்ரீமான் ஜெயராமன் அவர்களே, நீங்கள் இதற்குப் பதில் சொல்லலாமே.ராவணனுக்கு அவனை விரும்பாத ஒரு பெண்ணைத் தொட்டால் தலை சுக்கு நூறாகிவிடுமென்ற ஒரு சாபம் இருந்தது. அதனாலேயே அவன் சீதையை அசோக வனத்தில் வைத்து நைச்சியம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தான். தொட முடியவில்லை.எம்பெருமான் அவனை அழித்ததற்குக் காரணம் அவன் ஒரு ஸ்த்ரீ லோலன் என்பதே. ஆனால், பெருமானின் தந்தைக்கோ ராவணன் பெற்ற சாபத்திற்கு நேரெதிரான சாபமிருந்ததாகக் கேள்வி. (சரியா என்று தெரியவில்லை.) அதாவது தசரதன் அடிக்கடி திருமணம் செய்ய வேண்டும் என்பதே அச்சாபம் (சாபமா, அல்லது வரமா? :-) ). ராமனின் தந்தையும் பல பெண்களை மணம் செய்து கொண்டவர்தான். இருவரும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தினாலும், தசரதனை வணங்கும் ராமன் ராவணனை அழிக்கிறான். இதுதான் எனக்குப் புரியவில்லை. விளக்கம் தேவை.தன் தந்தையின் நடத்தையே தனயனை ஒரே ஒரு பெண்ணின் மேல் மட்டும் காதல் பக்தி கொள்ளத் தூண்டியதோ என்றும் தோன்றுகிறது.
April 19, 2006 5:47 AM

என் பதில்:

ம்யூஸ் அவர்களுக்கு,தங்கள் கேள்வி விசித்திரமாய் இருக்கிறது. என்ன அடிப்படையில் கேட்கீறீர்கள் என்பது விளங்கவில்லை.

கேலிக்காகவா, இல்லை நிஜமாகவே இது உங்கள் சந்தேகமா.

தசரதன் வருடத்துக்கு ஒரு தடவை மணம் புரிந்தது அவனுடைய சாய்ஸ். அது ஒரு சாபத்திலிருந்து தன்னை காக்க அவன் எடுத்த உத்தி. அவன் யாருடைய மனைவியையும் கடத்தவில்லை. யாரையும் வலுக்கட்டாயமாக கெடுக்கவில்லை. மிரட்டி அடிபணியவைக்கவில்லை. அடிமைப்படுத்தி சேவகம் புரிய வைக்கவில்லை.

இந்த நான்கையும் ராவணன் செய்தான்.

பல மனைவிகளை ஏற்பது நம் கலாசாரத்துக்கு உட்பட்ட ஒரு செயல். இதில் வெட்கப்பட வேண்டியது ஒன்றும் இல்லை. (தங்களைப் போன்ற புரட்சியாளர்கள் தவிர்த்து).

எத்தனையோ குடும்பங்களில் அக்காவே வற்புறுத்தி தன் தங்கையை மாமாவுக்கு மணம் செய்து வைத்ததை நான் அறிவேன். குழந்தைக்காக.


ஏன், தமிழர் காவலர்களாக தங்களை கூறிக்கொள்ளும் மூத்த தலைவர்களும் இரண்டு மனைவி வைத்துக்கொண்டு பெருமையாக சிலப்பதிகாரம் பற்றி பேசுகிறார்களே!

(இரண்டாவது கல்யாணம் சட்ட விரோதம். இவர்கள் சட்டத்தை மீறியவர்கள்தான். ஆனால், முதல் மனைவியின் புகார் இல்லாமல் கைது செய்ய முடியாது என்ற அற்ப விஷயத்திற்காக இவர்கள் தோளில் துண்டு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.)

தசரதன் பெண்மையை மதித்தவன். தன் மனைவி மார்களை கலந்து ஆலோசிக்காமல் அவன் எந்த முடிவும் எடுக்க மாட்டான். மனைவி கைகேயியுடன் போருக்கு செல்லும் அளவுக்கு அவன் மனைவி மார்களுக்கு சம உரிமை வழங்கியிருந்தான்.

அவன் எங்கே! ராவணன் எங்கே.

ராவணன் பார்க்கும் பெண்களை உடனே பெண்டாள நினைப்பவன். தன் அண்ணன் குபேரன் மனைவியையே கற்பழிக்க முயற்சி செய்து சாபம் வாங்கியவன். தேவ லோகத்து பெண்களை தகாது நடந்து சாபம் வாங்கினவன்.

தன் சுய லாபத்திற்காக நாட்டையே பணயம் வைத்தான். மனைவி, தம்பிகள் சொல்லியும் கேட்காமல் தேவிக்காக இலங்கையே அழித்தான். ஆனால், தசரதன் தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற அநியாய கைகேயின் கோரிக்கையும் ஏற்றுக்கொண்டவன்.

இவர்களை ஒரே தராசில் நீங்கள் காட்டுவது என்ன வருத்தமான விஷயம்!

தசரதன் நடவடிக்கைகளில் வருந்தி ராமன் ஏகபத்தினி விரதம் ஏற்றான் என்பது மிகவும் அடாதது.

ராமாயணத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் ராமன் தசரதன் புகழ் பேசுகிறான். ராமனை நீ யார் என்று யாராவது கேட்டால் போதும், தசரதாட்மஜம் என்று தசரதனின் பையன் என்றுதான் சொல்லிக்கொள்வான்.

காட்டில் பரதனை பார்த்த வுடன் ராமன் கேட்கும் முதல் கேள்வியே நன் பெருமைக்குரிய அப்பா எப்படி என்றுதான். தேவியை காட்டுக்கு வராதே என்று ராமன் கெஞ்சும்போதும் என் அப்பாவுக்கு நீ சேவை செய் என்றுதான் கேட்கிறான்.

ஜடாயுவை கட்டிக்கொண்டு அழும் காரணமே அவர் தசரதனின் நண்பன் என்றுதான். என் அப்பாவையே தங்களிடம் பார்க்கிறேன் என்கிறான்.

இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.தங்கள் பதிப்புகளில் வீச்சு இருக்கும் அளவிற்கு ஆழமும், உண்மையும் குறைந்து இருப்பது வருத்தமளிக்கிறது.


.கு: தசரதனின் சாபம்: ச்ரவணின் மரணத்தால் அவன் சாக வேண்டும் என்பது. ஆனால், exception ஆக, சாஸ்திரப்படி கல்யாணம் ஆகி ஒரு வருடம் விரதம் முடியாத்தால் விலக்கு. அதனால், வருடா வருடம் புது மணம் செய்து புது மாப்பிள்ளை exemption வாங்கிக் கொண்டார் இவர்.
April 19, 2006 10:58 AM